தாம்பரத்தில் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்; டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்பு


தாம்பரத்தில் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்; டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Sep 2021 8:46 AM GMT (Updated: 21 Sep 2021 8:48 AM GMT)

தாம்பரத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில், மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தலைமை தாங்கினார். இதில் நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., மாவட்ட பொருளாளர் எஸ்.சேகர், தாம்பரம் நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் காமராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் இந்திரன், ரத்தினகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல குரோம்பேட்டையில் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதி தலைமையிலும், தாம்பரம் கஸ்தூரி பாய்நகரில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாகூப் தலைமையிலும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவொற்றியூர் தேரடியில் உள்ள தி.மு.க. பகுதி அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ., திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் ஆகியோர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு, மாநில மீனவர் அணி செயலாளர் பத்மநாபன், பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன், ஆதிகுருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story