13 வயது சிறுமிக்கு 33 வயதானவருடன் கட்டாய திருமணம்


13 வயது சிறுமிக்கு 33 வயதானவருடன் கட்டாய திருமணம்
x
தினத்தந்தி 21 Sep 2021 5:56 PM GMT (Updated: 21 Sep 2021 5:56 PM GMT)

இளையான்குடி அருகே 13 வயது சிறுமிக்கு 33 வயதானவருடன் கட்டாய திருமணம் நடந்தது. இது தொடர்பாக மணமகன் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

சிவகங்கை, 

இளையான்குடி அருகே 13 வயது சிறுமிக்கு 33 வயதானவருடன் கட்டாய திருமணம் நடந்தது. இது தொடர்பாக மணமகன் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

சிறுமிக்கு திருமணம்

மதுரையை சேர்ந்த 13 வயது சிறுமியின் பெற்றோர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர். இதனால் அந்த சிறுமி சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரியாண்டிபுரத்தை சேர்ந்த தாத்தா பராமரிப்பில் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமியின் உறவினரான இளையான்குடியை அடுத்த திருவூடையார்புரத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்க இரு குடும்பத்தினரும் சம்மதித்து உள்ளனர். சிறுமி இந்த திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இருப்பினும் சிறுமியின் எதிர்ப்பை மீறி இவர்களது திருமணம் கடந்த 16&ந்தேதி நடைபெற்று உள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த ஊர்நல அலுவலர் கஸ்தூரி சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 13 வயதான சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற்று உள்ளது என புகார் மனு கொடுத்தார்.

6 பேர் மீது வழக்கு

இந்த புகாரின் பேரில் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயராணி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 13 வயதான சிறுமிக்கு 33 வயதானவருடன் திருமணம் நடைபெற்றது தெரிய வந்தது.
இதையடுத்து மணமகன் சூரிய பிரகாஷ் (33) மற்றும் அவரது தந்தை தாஸ் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, இளையான்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து குழந்தை திருமணம் நடைபெறுவது அதிகரித்து உள்ளது. எனவே சமூகநலத்துறையினர் அப்பகுதி மக்களுக்கு குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி தவறு என்பதை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மீறி குழந்தை திருமணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் வருங்காலங்களில் இது போன்ற குழந்தை திருமணம் நடைபெறுவது தடுக்கப்படும் என்று கூறினார்கள்

Next Story