விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Sep 2021 6:24 PM GMT (Updated: 21 Sep 2021 6:24 PM GMT)

ஆரல்வாய்மொழியில், மனைவியின் நினைவு நாளையொட்டி விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியில், மனைவியின் நினைவு நாளையொட்டி விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயி
ஆரல்வாய்மொழி, மிஷன் காம்பவுண்டு கீழத்தெருவை சேர்ந்தவர் ஜான் தேவதாசன் (வயது 70), விவசாயி. இவரது மனைவி சொர்ணம். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் குடும்பத்துடன் கோவையில் தங்கியுள்ளார். மகள் திருமணமாகி வெளியூரில் உள்ளார். 
சொர்ணம் கடந்த ஆண்டு இறந்து விட்டார். அதன்பின்பு ஜான் தேவதாசன் மிகுந்த சோகத்தில் காணப்பட்டார். பிள்ளைகள் வெளியூரில் தங்கியுள்ள நிலையில் அவர் தனியாக வாழ்ந்து வந்தார். மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று வந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவையில் தங்கி இருந்த மகன் ஊருக்கு வந்திருந்தார். 
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜான்தேவதாசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கடந்து வீட்டுக்கு வந்த மகன், தந்தை தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதார். 
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் மாரிசெல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஜான் தேவதாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி இறந்த முதலாம் ஆண்டு தினத்தையொட்டி கணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story