ரூ.100 கோடி சொத்துக்கள் மீட்பு


ரூ.100 கோடி சொத்துக்கள் மீட்பு
x
தினத்தந்தி 21 Sep 2021 9:09 PM GMT (Updated: 21 Sep 2021 9:09 PM GMT)

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான 3 கட்டிடங்களை மாநகராட்சி கையகப்படுத்தியது. இந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என்று தெரிவித்த மாநகராட்சி அதிகாரிகள், அந்த கட்டிடங்களில் வாசலில் நோட்டீசு ஒட்டியதோடு, தண்டோரா மூலமும் அறிவிப்பு வெளியிட்டனர்.

தஞ்சாவூர்;
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான 3 கட்டிடங்களை மாநகராட்சி கையகப்படுத்தியது. இந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என்று தெரிவித்த மாநகராட்சி அதிகாரிகள், அந்த கட்டிடங்களில் வாசலில் நோட்டீசு ஒட்டியதோடு, தண்டோரா மூலமும் அறிவிப்பு வெளியிட்டனர்.
100 ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள்
தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள மாநகராட்சி நிலங்கள் மற்றும் கட்டிடங்களை மாநகராட்சி கையப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே 100 ஆண்டுகள் கடந்த யூனியன் கிளப், காவிரி லாட்ஜ், ஜூபிடர் தியேட்டர் ஆகியவை செயல்பட்டு வந்தது. இவை அனைத்தும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் ஆகும்.
இவற்றில் காவிரி லாட்ஜ் மற்றும் ஜூபிடர் தியேட்டர் ஆகியவை 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வந்தது. இவற்றுக்கான குத்தகை காலம் கடந்த மே மாதத்துடன் முடிவடைந்து விட்டது. இதே போல 100 ஆண்டுகள் கடந்த யூனியன் கிளப்புக்கு ஆவணங்கள் எதுவும் முறையாக இல்லை என கூறப்படுகிறது.
இடங்களை காலி செய்ய உத்தரவு
இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம், ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றும் சட்டத்தின்கீழ் அகற்றுமாறு தொடர்புடைய நிர்வாகங்களிடம் மாநகராட்சி அலுவலர்கள் அறிவுறுத்தி நோட்டீசும் அனுப்பி இருந்தனர். இருப்பினும் அந்த இடங்கள் காலி செய்யப்படாமல் இருந்து வந்தது.  இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றும் சட்டத்தின் கீழ் இந்த கட்டிடங்களைக் கையகப்படுத்தியதற்கான நோட்டீசை அவற்றின் நுழைவு வாசல் கதவில் ஒட்டுமாறு அலுவலர்களுக்கு, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டார்.
அதன்படி மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமையில் மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், ரமேஷ், அறச்செல்வி, இளநிலை பொறியாளர் கண்ணதாசன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள், போலீசாருடன் நேற்று சம்பந்தப்பட்ட கட்டிடங்களுக்கு சென்றனர்.
தண்டோரா மூலம் அறிவிப்பு
முதலில் ஜூபிடர் தியேட்டர் வாசலில் இதற்கான நோட்டீசை ஒட்டினர். பின்னர் கேட்டில் அறிவிப்பு பேனரும் வைக்கப்பட்டது. அதில் "தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான மேற்கண்ட இடம் தமிழ்நாடு பொது வளாகங்கள்(ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றுதல்) 1975&ன் படி தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மாநகராட்சி வசம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இவ்விடத்தில் நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை பொதுமக்களுக்கு அறிவிக்கும் விதமாக தண்டோரா மூலமும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து காவிரி லாட்ஜ் வாசல் கதவிலும், யூனியன் கிளப் வாசல் கதவிலும் நோட்டீசு ஒட்டப்பட்டது. இதையொட்டி பாதுகாப்புக்காக போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
ரூ.100 கோடி மதிப்பு
இதேபோல காவிரி லாட்ஜ் முன்புறம் உள்ள கடைகள், தீபாவளி பண்டிகைக்கு பின்பு அகற்றப்பட உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கையகப்படுத்தப்பட்ட யூனியன் கிளப்  கட்டிடம் 29 ஆயிரத்து 743 சதுர அடியும், காவிரி லாட்ஜ் கட்டிடம் 40 ஆயிரத்து 390 சதுர அடியும், ஜூபிடர் தியேட்டர் கட்டிடம் 13 ஆயிரத்து 605 சதுர அடியும் பரப்பளவு கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் கூறுகையில், தற்போது கையகப்படுத்தப்பட்டுள்ள கட்டிடங்களின் மொத்த பரப்பளவு 2 ஏக்கர் 13 சென்ட் ஆகும். இந்த கட்டிடங்களை பயன்படுத்துவோர் அங்குள்ள பொருட்களை அகற்றிக்கொள்வதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பழைய பஸ் நிலையம் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு உள்ளது. இதுவும் விரைவில் அகற்றப்படும்என்றார்.

Next Story