வீட்டில் தூங்கிய பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது


வீட்டில் தூங்கிய பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Sep 2021 9:36 PM GMT (Updated: 21 Sep 2021 9:36 PM GMT)

திருமானூர் பகுதியில் வீட்டில் தூங்கிய பெண்களிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கீழப்பழுவூர்:

தாலிக்கயிறை அறுத்து...
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆங்கியனூர் கிராமத்தை சேர்ந்த முருகேசனின் மனைவி புனிதவள்ளி. இதேபோல் அழகப்பனின் மனைவி வேம்பாயி(வயது 55). சம்பவத்தன்று புனிதவள்ளியும், வேம்பாயியும் அவரவர் வீட்டில் கதவைத் தாழிடாமல் தூங்கியுள்ளனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து புனிதவள்ளி கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கயிறை கத்தரித்து தாலி மற்றும் குண்டு என ஒரு பவுன் நகையை திருடிச்சென்றனர்.
இதேபோல் வேம்பாயி வீட்டிற்கு சென்று அவர் அணிந்திருந்த முக்கால் பவுன் தாலியை திருடிச்சென்றனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தாலியை காணாததால் 2 பெண்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து இருவரும் வெங்கனூர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்தனர்.
2 பேர் கைது
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் நகை பறிப்பில் ஈடுபட்டது தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(40) மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மதியழகன்(39) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story