புதுப்பொலிவு பெற்ற நெல்லை புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படுமா?


புதுப்பொலிவு பெற்ற நெல்லை புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படுமா?
x
தினத்தந்தி 21 Sep 2021 10:16 PM GMT (Updated: 21 Sep 2021 10:16 PM GMT)

நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பொலிவு பெற்றுள்ள புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நெல்லை:
மத்திய அரசின் சீர்மிகு நகரம் எனப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.975 கோடி செலவில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை பஸ் நிலையங்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் 4 பிளாட்பாரங்கள் புதுப்பிக்கப்படுவதுடன், கூடுதலாக 2 பிளாட்பாரங்களும் கட்டப்பட்டு உள்ளன. அங்கு தரைத்தளம் மற்றும் முதல் தளம் என கடைகள் கட்டப்பட்டு உள்ளன. ஏற்கனவே 4 பிளாட்பாரங்களில் இருந்த கடைகளின் மேல் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் அமைத்து கடைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. இதுதவிர கழிப்பிட வசதிகள், பஸ்கள் வந்து செல்லும் விவரங்களை தெரிவிக்கும் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டு உள்ளன.

பஸ் வந்து செல்லும் 2 பிளாட்பாரங்களுக்கு நடுவே அழகிய பசுமையான புல்வெளி அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது 4 பிளாட்பாரங்கள் போக்குவரத்துக்கு தயார் ஆகி விட்டது. மத்திய பகுதியில் இருக்கும் தென்காசி, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளுக்கு பஸ்கள் நின்று செல்லும் 2 பிளாட்பாரங்கள், நாகர்கோவில் பஸ்கள் நிற்கும் பிளாட்பாரம் மற்றும் அதன் எதிரே அமைக்கப்பட்டுள்ள புதிய பிளாட்பாரம் ஆகிய 4 பிளாட்பாரங்கள் தயார் நிலையில் உள்ளது. பஸ் நிலையம் நவீன முறையில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. மதுரை, சென்னை பஸ்கள் செல்லும் பிளாட்பாரம் மற்றும் அதன் எதிரே புதிதாக அமைக்கப்பட்டு வரும் பிளாட்பாரம் ஆகியவை தயார் ஆகிக்கொண்டிருக்கிறது. பஸ்கள் உள்ளே வந்து, வெளியே செல்லும் ரோடு கான்கிரீட் ரோடாக அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி தொடங்கப்பட்டதால் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அருகில் பெருமாள்புரம் போலீஸ் நிலையம் எதிரே புறநகர் பஸ்களுக்கும், விரைவு பஸ்களுக்கும் தனித்தனியாக 2 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக பெண்கள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இந்த நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்குகிறது. அப்போது தற்காலிக பஸ் நிலைய வளாகம் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலைக்கு செல்லும்.

எனவே பயணிகளின் நிலை கருதி புதிய பஸ் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதல் கட்டமாக தயார் நிலையில் இருக்கும் 4 பிளாட்பாரங்களை மட்டுமாவது விரைவில் திறந்து பஸ் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

இதுகுறித்து அந்த பகுதி ஆட்டோ நிறுத்தத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குமார் கூறுகையில், கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நெல்லை புதிய பஸ் நிலையம் கட்டுமானத்துக்காக மூடப்பட்டது. பஸ் நிலையம் அருகில் 150 ஆட்டோ டிரைவர்கள் இரவு, பகலாக வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளை வீட்டுக்கும், வீட்டில் இருந்து பஸ் நிலையத்துக்கும் அழைத்து சென்று வந்தோம். தற்போது 1½ ஆண்டுக்கு மேலாக ஆட்டோ டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே பஸ் நிலையத்தில் உடனடியாக பணிகள் முடிந்த பிளாட்பாரங்களை மட்டுமாவது திறந்து பஸ் போக்குவரத்தை எளிமையாக்க வேண்டும் என்றார். 

இதேபோல் பஸ் நிலைய வளாகத்தில் கடைகள் நடத்தி வந்த வியாபாரிகள் கூறுகையில், பஸ் நிலையம் மூடப்பட்டு கிடப்பதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளோம். தற்காலிக பஸ் நிலைய வளாகத்தில் பயணிகளுக்கு தேவையான பொருட்கள் எதுவும் கிடைப்பது இல்லை. தற்காலிக பஸ் நிலையங்களில் பயணிகள் அங்குமிங்கும் மூட்டை முடிச்சுகளுடன் நடந்து சென்று பஸ்களை தேடி கண்டுபிடித்து ஏறிச்செல்கிறார்கள். அதாவது புறநகர் பஸ்கள் ஓரிடத்திலும், விரைவு பஸ்கள் மற்றொரு இடத்திலும் நிறுத்தப்படுவதால் பயணிகள் குழப்பம் அடைகிறார்கள். எனவே பயணிகள், வியாபாரிகள் நலன் கருதி புதுப்பிக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நெல்லை புதிய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. தயார் நிலையில் இருக்கும் 4 பிளாட்பாரங்களில் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றனர்.

புதிய பஸ் நிலையத்தின் முகப்பு பகுதியில் காலியாக கிடந்த இடத்தில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வளாகத்தில் அழகிய புல்தரை அமைக்கப்பட்டு இருப்பதுடன் ராக்கெட்டுகள், டைனோசர் மாதிரிகள் மற்றும் செயற்கை நீரூற்று, வினோத விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டு உள்ளன. டிஸ்கவரி மையம், புதுமை மையம், ரோபோக்கள் பற்றிய மையம் ஆகிய 3 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு நவீன டிஜிட்டல் திரைகளில் பொதுமக்களுக்கு அறிவியல் விந்தைகள் குறித்து விளக்க படம் போட்டு காண்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மையங்கள் முன்பு விஞ்ஞானிகள் சிலைகளும், அப்துல்கலாம் முழுஉருவ சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவை பாதுகாப்பாக பராமரிக்கும் வகையில் நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

Next Story