சூளகிரி அருகே அணையில் மூழ்கி புது மாப்பிள்ளை சாவு- காப்பாற்ற சென்ற மாமியாரும் பலியான பரிதாபம்


சூளகிரி அருகே அணையில் மூழ்கி புது மாப்பிள்ளை சாவு- காப்பாற்ற சென்ற மாமியாரும் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 22 Sep 2021 5:43 AM GMT (Updated: 22 Sep 2021 5:43 AM GMT)

சூளகிரி அருகே அணையில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலியானார். அவரை காப்பாற்ற சென்ற மாமியாரும் பரிதாபமாக இறந்தார்.

சூளகிரி:
சூளகிரி அருகே அணையில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலியானார். அவரை காப்பாற்ற சென்ற மாமியாரும் பரிதாபமாக இறந்தார்.
புதுமாப்பிள்ளை
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி டி.கே.நகரை சேர்ந்தவர் பஜ்லூன் (வயது 35). இவருடைய கணவர் இஸ்மாயில் இறந்து விட்டார். பஜ்லூன் தனது மகள் முஷ்கானை (18), கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே தேஜ்ஜனஹள்ளியை சேர்ந்த ஷமீர் (22) என்பவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார். 
புதுமாப்பிள்ளை ஷமீர் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு அவர் வந்திருந்தார். பின்னர் நேற்று மனைவி முஷ்கான், மாமியார் பஜ்லூன் மற்றும் உறவுக்கார குழந்தைகள் 2 பேருடன் சேர்ந்து ஷமீர் சூளகிரி அருகே உள்ள வேம்பள்ளி அணையை சுற்றி பார்க்க சென்றனர். இவர்கள் 5 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வேம்பள்ளி அணைக்கு வந்தனர்.
அணையில் மூழ்கி பலி
அங்கு அணையில் ஷமீர் குளிக்க தொடங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி தத்தளித்தார். அப்போது அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மாமியார் பஜ்லூன், அவரை காப்பாற்றும் நோக்கத்துடன் அணையில் குதித்து மருமகனை காப்பாற்ற போராடினார். ஆனால் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் அணை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 
தன் கண் முன்னே கணவரும், தாயாரும் இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த முஷ்கான் கண்ணீர் விட்டு கதறினார். அவரது அழுகுரல் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
அணையில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலியான நிலையில், அவரை காப்பாற்ற சென்ற மாமியாரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story