தண்டையார்பேட்டையில் நன்னடத்தை விதியை மீறிய ரவுடிக்கு 276 நாள் சிறை


தண்டையார்பேட்டையில் நன்னடத்தை விதியை மீறிய ரவுடிக்கு 276 நாள் சிறை
x
தினத்தந்தி 22 Sep 2021 10:36 AM GMT (Updated: 22 Sep 2021 10:36 AM GMT)

தண்டையார்பேட்டையில் நன்னடத்தை விதியை மீறி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக ரவுடிக்கு 276 நாள் சிறைத்தண்டனை விதித்து போலீஸ் துணை கமிஷனர் உத்தரவிட்டார்.

பெரம்பூர், 

தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் வினோத் (வயது 26). பிரபல ரவுடியான இவர் மீது தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, ஆர்.கே.நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தண்டையார்பேட்டை போலீசில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர், நன்னடத்தை விதியின் படி திருந்தி வாழ்வதாக கூறி கடந்த ஜூன் மாதம் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத்திடம் உறுதிமொழி பத்திரம் எழுதிக்கொடுத்தார்.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி தண்டையார்பேட்டை- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் ஒருவரை வெட்டிய வழக்கில் தண்டையார்பேட்டை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

நன்னடத்தை விதியை மீறி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக வினோத்தை தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் நேற்று வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத்திடம் ஆஜர்படுத்தினார். அவர் தண்டனை காலம் தவிர்த்து 276 நாள் மேலும் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதன் பேரில், அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story