ஏ.டி.எம். மையத்தில் முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து பணமோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்


ஏ.டி.எம். மையத்தில் முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து பணமோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 22 Sep 2021 9:01 PM GMT (Updated: 22 Sep 2021 9:01 PM GMT)

பணமோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

திருமங்கலம்
ஏ.டி.எம். மையத்தில் முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து பணமோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
முதியவர்களை குறி வைத்து...
திருமங்கலத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தின் உள்ளே வாலிபர் ஒருவர் டிப்&டாப்பாக உடை அணிந்து நின்று கொண்டிருந்தார். ஆனால் பணம் எடுக்காமல் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முதியவரிடம் பணம் எடுக்க உதவுவதாக அந்த வாலிபர் கூறினார். முதியவரிடம் இருந்து ரகசிய எண்ணை பெற்று ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்தார். பின்னர் பணத்தை சரிபார்க்குமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து முதியவர் பணத்தை எண்ணி சரிபார்க்கும்போது, அவருக்கு தெரியாமலேயே ரகசிய எண்ணை பயன்படுத்தி பணம் எடுத்து தான் வைத்து கொண்டார். 
அந்த வாலிபர் நீண்டநேரம் ஏ.டி.எம்.மையத்திற்குள் நின்று கொண்டு இருந்ததால் சந்தேகப்பட்டு அந்த வந்த மற்ற வாடிக்கையாளர்கள் திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரைப் பிடிக்க முயற்சித்தனர். அப்போது அவர் தப்பியோட முயன்றார். இருப்பினும் அந்த வாலிபரை பிடித்து திருமங்கலம் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டெல்லி கணேஷ் (வயது 28) என தெரியவந்தது. 
கைது
மேலும் விசாரணை செய்ததில் அவர் தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்பட 18 மாவட்டங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க வரும் முதியவர்களிடம் ஏமாற்றி மோசடி செய்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story