வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில்  அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
x
தினத்தந்தி 23 Sep 2021 6:29 PM GMT (Updated: 23 Sep 2021 6:29 PM GMT)

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

வேலூர்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல்

வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு முன் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தேர்தலையொட்டி அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
வாக்குப்பதிவு அன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணி இன்றியமையாத ஒன்றாகும். எனவே தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 11 ஆயிரம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவேண்டிய அவசியம் உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

இதுதொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மேற்கொள்ள உள்ளனர். எனவே இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கூறி உள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளதால் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை (சனிக்கிழமை) வழக்கம்போல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி ஆசிரியர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வாக்குச்சாவடிகளில் பணிபுரிய சிறப்பு பயிற்சி அந்தந்த வட்டாரங்களில் அளிக்கப்பட உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

Next Story