தொப்பூர் கணவாய் மலைப்பகுதியில் கன்டெய்னர் லாரி மோதி டிரைவர் பலி


தொப்பூர் கணவாய் மலைப்பகுதியில் கன்டெய்னர் லாரி மோதி டிரைவர் பலி
x
தினத்தந்தி 25 Sep 2021 7:25 PM GMT (Updated: 25 Sep 2021 7:25 PM GMT)

தொப்பூர் கணவாயில் கன்டெய்னர் லாரி மலைப்பகுதியில் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.

நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் கன்டெய்னர் லாரி மலைப்பகுதியில் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.
மலைப்பகுதியில் லாரி மோதியது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து டைல்ஸ் ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி தூத்துக்குடி மாவட்டத்திற்கு புறப்பட்டது. இந்த லாரியை தூத்துக்குடி டவுன் பகுதியை சேர்ந்த டிரைவர் ராமர் (வயது 34) என்பவர் ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று காலை லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. 
அப்போது கன்டெய்னர் சாலையில் விழுந்தது. லாரி எதிர்திசையில் உள்ள மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் ராமர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கும், சுங்கச்சாவடி ரோந்து
படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 
2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் லாரி மற்றும் கன்டெய்னரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story