கள்ளக்காதலனுடன் காதல் மனைவி ஓட்டம்: முகநூலில் வீடியோ பதிவிட்டு வாலிபர் தற்கொலை


கள்ளக்காதலனுடன் காதல் மனைவி ஓட்டம்: முகநூலில் வீடியோ பதிவிட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 25 Sep 2021 9:47 PM GMT (Updated: 25 Sep 2021 9:47 PM GMT)

கள்ளக்காதலனுடன் காதல் மனைவி ஓடியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விஜயாப்புராவில் நடந்துள்ளது.

விஜயாப்புரா: கள்ளக்காதலனுடன் காதல் மனைவி ஓடியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விஜயாப்புராவில் நடந்துள்ளது. 
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காதல் திருமணம்

விஜயாப்புரா மாவட்டம் தாளிகோட்டி தாலுகா பொம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 25). இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஷோபனா என்பவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான புதிதில் கணவன்&மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேசின் வீட்டின் அருகே, அவருடைய சகோதரரின் உறவினரான ஸ்ரீசைல் என்பவர் குடி வந்தார். 

இதனால் ஸ்ரீசைலுக்கும், ஷோபனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

கள்ளக்காதலனுடன் ஓட்டம்

இந்த கள்ளக்காதல் விவகாரம் பற்றி வெங்கடேசுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் தனது மனைவி மற்றும் ஸ்ரீசைலை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடவில்லை என தெரிகிறது. இதன்காரணமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக வெங்கடேஷ் போலீசிலும் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் இருவரையும் அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷோபனா திடீரென்று மாயமானார். இதேபோல, ஸ்ரீசைலும் மாயமானார். இதனால் கள்ளக்காதலன் ஸ்ரீசைலுடன், ஷோபனா வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இதனால் வெங்கடேஷ் மனமுடைந்து காணப்பட்டார். 

தற்கொலை

இந்த நிலையில் காதல் மனைவி தன்னை விட்டு சென்றுவிட்டாளே என விரக்தியில் இருந்த வெங்கடேஷ், நேற்று முன்தினம் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் என் மனைவி என்னை விட்டு கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டாள். இதனால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். என்னுடைய தற்கொலைக்கு ஸ்ரீசைல் தான் காரணம் என்று பேசி வீடியோ பதிவிட்டிருந்தார். 

இதனை பார்த்தது அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்களும், உறவினர்களும் விரைந்து வந்தனர். அப்போது வெங்கடேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாளிகோட்டி போலீசார் சம்பவ இடத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், காதல் மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தாளிகோட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story