மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் 945 பேர் கைது


மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் 945 பேர் கைது
x
தினத்தந்தி 27 Sep 2021 7:26 PM GMT (Updated: 27 Sep 2021 7:26 PM GMT)

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 945 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை:
சாலை மறியல்
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும் என ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அருகே இருந்து விவசாயிகள் சங்கத்தினர் ஊர்வலமாக பஸ் நிலையத்திற்கு வந்து நுழைவுவாயில் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பாதுகாப்பு
இந்த போராட்டத்திற்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சோமையா தலைமை தாங்கினார். மேலும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராமையன், ராஜாங்கம், புதுக்கோட்டை தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராஜா மற்றும் நிர்வாகிகள், விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர் உள்பட விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள், தி.மு.க. கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். 
மறியல் போராட்டத்தையொட்டி பாதுகாப்பு பணியில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் தலைமையில் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேன் மற்றும் பஸ்களில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மறியிலில் 50 பெண்கள் உள்பட 215 பேர் கைது செய்யப்பட்டனர்.
கறம்பக்குடி
கறம்பக்குடியில் மாவட்ட விவசாய சங்க தலைவர் பொன்னுசாமி தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த விவசாய அணி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கறம்பக்குடி வள்ளுவர் திடலில் இருந்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் கறம்பக்குடி சீனி கடைமுக்கத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 106 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆவுடையார்கோவில், அறந்தாங்கி
ஆவுடையார்கோவிலில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு விவசாய சங்கம் தாலுகா செயலாளர் எம்.எஸ்.கலந்தர், த.வி.ச.ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 41 பேரை ஆவுடையார்கோவில் போலீசார் கைது செய்தனர்.
அறந்தாங்கியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 43 பேரைஅறந்தாங்கி போலீசார் கைது செய்தனர். அறந்தாங்கியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தண்டாயுதபாணி தலைமையில் மறியல் ஈடுபட்ட 12 பேரை அறந்தாங்கி போலீசார் கைது செய்தனர். நாகுடியில் மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் பொன்துரை தலைமையில் சாலைமறியல் செய்தவர்களை நாகுடி போலீசார் கைது செய்தனர்.
கோட்டைப்பட்டினம், கீரனூர்
கோட்டைப்பட்டினம் அருகே மீமிசலில் சாலை மறியல் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினரை மீமிசல் போலீசார் கைது செய்தனர். இதில் மாவட்ட செயலாளர் அனிபா, மாவட்ட தலைவர் செய்யது அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைப்போல் மீமிசல் வர்த்தக சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வர்த்தகர் சங்க துணை தலைவர் வான்மீகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீரனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் தங்கவேல் தலைமையில் விவசாய சங்கத்தினர் காந்தி சிலை முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதில் 2 பெண்கள் உள்பட 42 பேர் கைது செய்யப்பட்டனர்
கந்தர்வகோட்டை, கீரமங்கலம், பொன்னமராவதி
கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், சின்னத்துரை எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். 
கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகரச் செயலாளர் பாலமுருகன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கீரமங்கலத்தில் சில கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.
பொன்னமராவதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு. ஆகிய ஒன்றிய குழுக்கள் சார்பில்  அண்ணா சாலையில் ஊர்வலம் மற்றும் தபால் நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 77 பேர் கைது செய்யப்பட்டனர்.
அன்னவாசல்
அன்னவாசல் பஸ் நிலையம் அருகே நடந்த மறியல் போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கம் ஜோஷி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றி செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 60 பேரை அன்னவாசல் போலீசார் கைது செய்தனர். 
945 பேர் கைது
இதேபோல கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல மீமிசலில் வர்த்தக கழகத்தினர் சார்பில் மதியம் 300 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 இடங்களில் நடந்த போராட்டத்தில் 138 பெண்கள் உள்பட 945 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை எதுவும் பாதிக்கப்படவில்லை. பஸ், ரெயில்கள் வழக்கம் போல ஓடின. அரசு அலுவலகங்கள் இயங்கின. பொதுப்போக்குவரத்தில் எந்தபாதிப்பும் இல்லை.
பஞ்சாப் சுற்றுலா பயணிகள் ஆதரவு
விவசாயிகள் சங்கத்தின் போராட்டத்தில் ஈடுபட்ட போது புதுக்கோட்டைக்கு சுற்றுலா வந்திருந்த பஞ்சாப் மாநில விவசாய குடும்பத்தை சேர்ந்த 5 சுற்றுலா பயணிகள், ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். இதில் ஜெகத்ர்சிங் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம் மிகவும் மோசமானது. விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு நான் ஆதரவு தெரிவிக்கின்றேன். அதனால் தான் இந்த போராட்டத்திலும் ஆதரவு தெரிவிக்கின்றேன். நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் ரோட்டிற்கு வந்து போராட்டம் நடத்த வேண்டும் என்றார்.

Next Story