வீட்டின் கதவை உடைத்து 28 பவுன் நகை- பணம் கொள்ளை


வீட்டின் கதவை உடைத்து 28 பவுன் நகை- பணம் கொள்ளை
x
தினத்தந்தி 27 Sep 2021 7:51 PM GMT (Updated: 27 Sep 2021 7:51 PM GMT)

கோபியில் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.

கோபியில் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.
டீக்கடை 
கோபி சாய் அபிராமி நகரை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 63). இவர் கோபியில் உள்ள கோர்ட்டு அருகே டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தேன்மொழி. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை துரைராஜ், அவருடைய மனைவி தேன்மொழி மற்றும் மகன் விஜயகுமார் ஆகியோர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் உள்ள தங்களுடைய உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளனர். 
கதவு உடைக்கப்பட்டு...
பின்னர் அவர்கள் அனைவரும் இரவில் மீண்டும் வீட்டுக்கு வந்து உள்ளனர். அப்போது அவர்கள் வீட்டின் முன்பக்க கதவை திறக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டின் பின்புறம் சென்று உள்ளனர். 
அப்போது வீட்டின் பின்புற கதவு இரும்பு கம்பியால் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் பதற்றத்துடன் வீட்டுக்குள் சென்றனர். அங்கு வீட்டினுள் இருந்த 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் உள்ள துணிகள் மற்றும் பொருட்கள் கீழே சிதறி கிடந்ததை கண்டனர். மேலும் பீரோவின் உள்ளே வைக்கப்பட்டிருந்த 28 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரத்தை காணவில்லை. 
வலைவீச்சு
வீட்டில் ஆட்கள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் பின்புறமாக சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். பின்னர் அவர்கள் முன்புற கதவை உள்புறமாக தாழ்போட்டுவிட்டு வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று உள்ளனர். அப்போது அங்கிருந்த 4 பீரோக்களை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு பின்புறமாகவே தப்பி சென்றது தெரிய வந்தது. 
இதுகுறித்து கோபி போலீசில் துரைராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் கை ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகை மற்றும் தடயங்களை பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 
இந்த கொள்ளை சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story