கல்லூரி மாணவர் ஓட்டிசென்ற கார் மோதி 2 பெண்கள் சாவு 6 பேர் படுகாயம்


கல்லூரி மாணவர் ஓட்டிசென்ற கார் மோதி 2 பெண்கள் சாவு 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Sep 2021 12:13 PM GMT (Updated: 29 Sep 2021 12:13 PM GMT)

வில்லிவாக்கத்தில் சாலை தடுப்பு சுவரில் பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியானார்கள். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

செங்குன்றம்,

சென்னை வில்லிவாக்கம் பாடி தாதா குப்பம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை தடுப்புச்சுவரில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், திருவண்ணாமலை மாவட்டம் காட்டு மலையனுரை சேர்ந்த கூலித் தொழிலாளர்களான மலர் (வயது 33), அம்சவல்லி (40), மூர்த்தி (30) சத்யா (26), முருகேசன் (30), ராதா (20) காமாட்சி (20) சசிகலா (26) ஆகிய 6 பெண்கள் உள்ளிட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 8 பேர் பணி செய்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், அதிகாலை 3 மணி அளவில் சென்னை புழல் ரெட்டேரியில் இருந்து பாடி நோக்கி வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று அப்பகுதியில் தொழிலாளர்கள் பெயிண்ட் வைப்பதற்காக நிறுத்தி வைத்திருந்த மினிவேன் மீது எதிர்பாராதவிதமாக பலமாக மோதியது.

2 பேர் பலி

அப்போது, மோதிய வேகத்திலேயே அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீதும் கார் மோதியதில் தொழிலாளர்கள் 8 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த சசிகலா (26) மற்றும் காமாட்சி (20) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

மேலும், மலர், ராதா, அம்சவல்லி, மூர்த்தி, சத்யா, முருகேசன் ஆகிய 6 பேர் படுகாயமடைந்த நிலையில் கிடந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கல்லூரி மாணவர் கைது

இந்த நிலையில் விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்தவர் சுஜித் (19) என்பவர் என தெரியவந்தது. இவர் தண்டலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அவர் நேற்று காலை கிழக்கு கடற்கரை சாலை நோக்கி செல்லும் போது விபத்து நடைபெற்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர் சுஜித்துக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக பாடி மேம்பாலத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story