விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 52 பேரிடம் ரூ.78 லட்சம் மோசடி திண்டிவனம் சிறை ஊழியர் கைது


விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 52 பேரிடம் ரூ.78 லட்சம் மோசடி திண்டிவனம் சிறை ஊழியர் கைது
x
தினத்தந்தி 29 Sept 2021 10:41 PM IST (Updated: 29 Sept 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 52 பேரிடம் ரூ.78 லட்சம் மோசடி செய்த திண்டிவனம் சிறை ஊழியர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா கண்ணந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிகுரூஸ். இவர் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு வி.சாத்தனூரை சேர்ந்த முருகன் (வயது 42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

அப்போது முருகன், தான் சிறைத்துறையில் அலுவலக உதவியாளராக வேலை செய்வதாகவும், முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவுக்கு நேர்முக உதவியாளராக இருந்து வருகிறேன். 

மேலும் பண்ருட்டியை சேர்ந்த வேலாயுதம், சரோஜாவிடம் டிரைவராக இருப்பதாகவும், நானும் எனது அண்ணன் லோகநாதன், வேலாயுதமும் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும், எங்களிடம் பணம் கொடுத்தால் கட்டாயம் அரசு வேலை கிடைக்கும் என்று கூறினார்.

52 பேரிடம் மோசடி

இதை நம்பிய அந்தோணிகுரூஸ், தன்னுடன் ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களிடம் இதுபற்றி கூறவே, மொத்தம் 52 பேர், அரசு வேலை வாங்கித்தரும்படி கேட்டு முருகனின் வங்கி கணக்கிலும், நேரடியாகவும் ரூ.78 லட்சத்து 20 ஆயிரத்தை கொடுத்துள்ளனர்.

பணத்தை பெற்ற முருகன், லோகநாதன், வேலாயுதம் ஆகிய 3 பேரும், மேற்கண்ட 52 பேருக்கும் அரசு வேலை வாங்கித்தராமலும், பணத்தை திருப்பிக்கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர்.

சிறை ஊழியர் கைது

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் முருகன் உள்ளிட்ட 3 பேர் மீதும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இருதயராஜ், ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று விக்கிரவாண்டியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற முருகனை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் லோகநாதன், வேலாயுதம் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான முருகன் தற்போது திண்டிவனம் கிளை சிறையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story