முதியவரின் வங்கி கணக்கில் ரூ.25 ஆயிரம் நூதன மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை


முதியவரின் வங்கி கணக்கில் ரூ.25 ஆயிரம் நூதன மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 Sep 2021 7:14 PM GMT (Updated: 29 Sep 2021 7:14 PM GMT)

முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரத்தை நூதன முறையில் மோசடி செய்தவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை:
ரூ.25 ஆயிரம் நூதன மோசடி
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே காரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவரது செல்போன் எண்ணிற்கு மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து தான் பேசுவதாகவும், தங்களுக்கு ஏதேனும் வங்கி தொடர்பாக புகார்கள், குறைகள் ஏதேனும் உள்ளதா? என கேட்டுள்ளார். அப்போது அவரது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவலில் வரும் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவிக்கும்படி கூறியுள்ளார். 
இதையடுத்து ராஜேந்திரனும் தனது செல்போன் எண்ணிற்கு வந்த ரகசிய குறியீடு எண்ணை மர்மநபரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த குறியீடு எண்ணை வைத்து ராஜேந்திரனின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.25 ஆயிரத்தை மர்ம நபர் தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளார். இந்த நிலையில் பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து அறிந்த ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story