சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 30 Sep 2021 5:13 PM GMT (Updated: 30 Sep 2021 5:13 PM GMT)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர், 

விருத்தாசலம் அருகே உள்ள தீவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சதீஷ்குமார் (வயது 31). இவருக்கும் விருத்தாசலத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமிக்கும் செல்போனில் மிஸ்டு கால் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. அந்த சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சிறுமியின் பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் சதீஷ்குமார் அங்கு சென்று அடிக்கடி சிறுமியிடம்  உல்லாசம் அனுபவித்து வந்தார். இதற்கிடையே சிறுமியின் காதல் விவகாரம் பற்றி அறிந்த பெற்றோர் அவரை கண்டித்தனர். இதில் மனமுடைந்த அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதையடுத்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகும் இருவரும் காதலித்து வந்தனர்.

பாலியல் பலாத்காரம்

மேலும் சதீஷ்குமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 27.5.2016 அன்று சுப்பிரமணியன் வீட்டுக்கு சென்று சிறுமிக்கு, சதீஷ்குமாருடன் திருமணம் செய்து வைப்பது குறித்து பேசியுள்ளனர். அதற்கு சுப்பிரமணியன் மற்றும் அவரது உறவினர்கள், சிறுமியின் உறவினர்களை ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி சிறுமி, விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

10 ஆண்டு சிறை

இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், சதீஷ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசின் ஏதாவது ஒரு திட்டத்திலிருந்து 30 நாட்களுக்குள் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாச்செல்வி ஆஜராகி வாதாடினார்.

Next Story