பெங்களூருவில் தள்ளுவண்டி வியாபாரிகளிடம் இருந்து ஒலி பெருக்கிகள் பறிமுதல்


பெங்களூருவில் தள்ளுவண்டி வியாபாரிகளிடம் இருந்து ஒலி பெருக்கிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Oct 2021 8:31 PM GMT (Updated: 5 Oct 2021 8:31 PM GMT)

பெங்களூருவில் அதிக சத்தம் எழுப்பும் ஒலி பெருக்கியால் மாணவர்கள், முதியவர்களுக்கு தொல்லை ஏற்பட்டதால், நடைபாதை வியாபாரிகளிடம் இருந்து ஒலி பெருக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு்ள்ளது.

பெங்களூரு:

தள்ளுவண்டி வியாபாரிகள்

  பெங்களூருவில் தள்ளுவண்டி, சரக்கு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலமாக வியாபாரிகள், காய்கறி, பழங்கள், பூ, பிற பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு வியாபாரத்தில் ஈடுபடும் தள்ளுவண்டி வியாபாரிகள் தாங்கள் விற்கும் பொருட்கள் பற்றி மக்களுக்கு தெரிவிப்பதற்காக சிறிய அளவிலான ஒலி பெருக்கிகளை சமீபமாக பயன்படுத்தி வருகின்றனர்.

  அந்த ஒலி பெருக்கியில் அதிக சத்தத்தை வைத்து கொண்டு குடியிருப்பு வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் முன்பாக நின்றபடி வியாபாரிகள் தாங்கள் விற்கும் பொருட்களை விற்கிறார்கள். இவ்வாறு ஒலி பெருக்கி மூலமாக அதிக சத்தத்துடன் வீடுகள் முன்பாக நின்று வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்வதால், மாணவர்கள் படிக்க முடியாமலும், முதியவர்களுக்கு பாதிப்பு மற்றும் தொல்லை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கமல்பந்த் உத்தரவு

  தற்போது கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறுவதால், அதிக சத்தம் எழுப்பும் ஒலி பெருக்கியால், அவர்களால் பாடத்தை கவனிக்க முடியவில்லை. வீடுகளில் நோயுடன் இருக்கும் முதியவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்திற்கு, சமூக வலைதளங்கள் மூலமாக மக்கள் தொடர்ந்து புகார் அளித்தனர்.

  இதையடுத்து, அதிக சத்தத்துடன் ஒலி பெருக்கியை வியாபாரி பயன்படுத்தவும், ஒலி பெருக்கியை பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் வியாபாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் வியாபாரிகள் முறையான அனுமதி பெறாமலும், தொடர்ந்து அதிக சத்தத்துடனும் ஒலி பெருக்கி மூலமாக வியாபாரம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஒலி பெருக்கிகள் பறிமுதல்

  இந்த நிலையில், புலிகேசிநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தள்ளுவண்டி, சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் ஒலி பெருக்கி மூலமாக வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 15-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் அதிக சத்தத்தை எழுப்பும் ஒலி பெருக்கியுடன் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதையடுத்து, 15 வியாபாரிகளையும் எச்சரித்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒலி பெருக்கிகளை பறிமுதல் செய்தார்கள்.

  இதுபோல், பெங்களுரு நகர் முழுவதும் அதிக சத்தம் எழுப்பும் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தும் வியாபாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Next Story