சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் 18 வகையான அபிஷேகம்-சிறப்பு பூஜை


சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில்  18 வகையான அபிஷேகம்-சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 6 Oct 2021 7:03 PM GMT (Updated: 6 Oct 2021 7:03 PM GMT)

மகாளய அமாவாசைெயாட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் 18 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. ஆனால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

வத்திராயிருப்பு, அக்.7-
மகாளய அமாவாசைெயாட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் 18 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. ஆனால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
 மகாளய அமாவாசை
வத்திராயிருப்பு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவிலுக்கு செல்ல பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டிற்கு முன்பு வந்தனர். 
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் வருகை புரிந்த பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரம் பகுதியில் முடி காணிக்கை செலுத்தினார்கள். கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தாணிப்பாறை வனத்துறை கேட்டிருக்கு முன்பு பக்தர்கள் தேங்காய் உடைத்து பத்தி, சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தாணிப்பாறை அடிவாரம் பகுதிகளில் உள்ள தோப்புகளில் நேர்த்திக்கடன்களை செலுத்த வந்த பக்தர்களின் வாகனங்களை தாணிப்பாறை விளக்கு பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். 
சிறப்பு பூஜை
மகாளய அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், விபூதி, உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. 
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம் சுவாமி மற்றும் சந்தன மகாலிங்க சுவாமி காட்சியளித்தனர். சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 
வேதனை
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மகாளய அமாவாசை அன்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 
ஆனால் இந்த ஆண்டு குரு நோய் தொற்றை காரணம் காட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படாது வேதனை அளிக்கிறது. கட்டுப்பாடுகள் விதித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து இருக்கலாம் என்றனர்.

Next Story