மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம்


மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2021 8:05 PM GMT (Updated: 6 Oct 2021 8:05 PM GMT)

மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வட்டார அமைப்பாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஜெயபால், மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர், துணை அமைப்பாளர்கள் ரமேஷ், ரேவதி, தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள். போராட்டத்தின்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையான கூலித்தொகையாக 273 ரூபாய் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அரசு உதவித்தொகை வழங்கிட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணக் கருவிகள் அனைவருக்கும் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் 2 மாதத்திற்கு ஒரு முறையும், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாதத்திற்கு ஒரு முறையும் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். இந்த போராட்டத்தில் வட்டார அளவிலான மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story