வீட்டில் தூங்கிய பெண்ணை தாக்கி 4 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு


வீட்டில் தூங்கிய பெண்ணை தாக்கி 4 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2021 9:48 PM GMT (Updated: 7 Oct 2021 9:48 PM GMT)

வீட்டில் தூங்கிய பெண்ணை தாக்கி 4 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.

மங்களமேடு:
மங்களமேட்டை அடுத்துள்ள பெருமத்தூர் அருகே உள்ள மிளகாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி நர்மதா(வயது 27). தர்மராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், நர்மதா அவரது அத்தையான கற்பகம் வீட்டில் நேற்று முன்தினம் இரவு தங்கியுள்ளார். வீட்டின் பின்புற கதவில் நடுதாழ்ப்பாளை போட்டுவிட்டு, வீட்டிற்குள் அவர்கள் தூங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டின் பின்புற கதவை தள்ளி திறந்து வீட்டிற்குள் நுழைந்த 2 மர்ம நபர்கள், தூங்கிக்கொண்டு இருந்த நர்மதாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த நர்மதா, மர்ம நபர்களை கண்டு சத்தம் போட்டார். இதனால் மர்ம நபர்கள், நர்மதாவை இழுத்து கதவின் முகப்பில் தலையை மோதச்செய்து, அவரது கழுத்தில் கிடந்த தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு, பின்புற வாசல் வழியாக சோளக்காட்டில் புகுந்து தப்பி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கதவில் மோதியதில் வலதுகண் புருவத்தில் காயமடைந்த நர்மதா லெப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story