உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நாளை நடக்கிறது


உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 7 Oct 2021 9:52 PM GMT (Updated: 7 Oct 2021 9:52 PM GMT)

உள்ளாட்சி தற்செயல் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்கிறது.

அரியலூர்:

போட்டியின்றி தேர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 6 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும், இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த 3 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிகளுக்கும், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) தற்செயல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி மன்ற தலைவர், 3 வார்டு உறுப்பினர்கள், அரியலூர் மாவட்டத்தில் 4 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதனால் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பிரம்மதேசம் ஊராட்சியில் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், வாலிகண்டபுரம் ஊராட்சியில் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேரும், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆடுதுறை ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் போட்டியிடுகின்றனர். இதே போல் அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 6 பேரும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயகனைப்பிரியாள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 3 பேரும், மணகெதி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 2 பேரும் போட்டியிடுகின்றனர்.
பிரசாரம் முடிந்தது
ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒட்டக்கோவில் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேரும், கோவிலூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட தளவாய் ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், சிறுகடம்பூர் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜெ.தத்தனூர் ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடையக்குறிச்சி ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், இலையூர் ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்பாபூர் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேரும் போட்டியிடுகின்றனர். நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதால் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் தற்செயல் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
25 வாக்குச்சாவடிகள் தயார்
இதைத்தொடர்ந்து வாக்காளர்கள் பிரம்மதேசம் 6-வது வார்டுக்கு வாக்களிக்க பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், வாலிகண்டபுரம் 7-வது வார்டுக்கு வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆடுதுறை 4-வது வார்டுக்கு ஆடுதுறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதே போல் அரியலூர் மாவட்டத்திலும் தற்செயல் தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கான 22 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
தற்செயல் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வாக்காளர்களுக்கு பூத் சிலிப் அரசு அலுவலர்களால் வழங்கப்படவுள்ளது. மாலையில் வாக்குச்சாவடிக்கு தேவையான வாக்குப்பதிவு பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படவுள்ளது. வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரைக்கு நடக்கிறது.
வாக்காளர்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் பிரம்மதேசம் 6-வது வார்டில் 76 ஆண் வாக்காளர்களும், 79 பெண் வாக்காளர்களும், வாலிகண்டபுரம் 7-வது வார்டில் 213 ஆண் வாக்காளர்களும், 210 பெண் வாக்காளர்களும் ஆடுதுறை 4-வது வார்டில் 149 ஆண் வாக்காளர்களும், 150 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 877 பேர் வாக்களிக்க உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் ஓலையூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ஆண், பெண் வாக்காளர்கள் 2,401 பேரும், நாயகனைப்பிரியாள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் 3,591 பேரும், மணகெதி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் 1,127 பேரும் வாக்களிக்க உள்ளனர். ேமலும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் ஒட்டக்கோவில் ஊராட்சி 6-வது வார்டில் 411 வாக்காளர்களும், வெற்றியூர் ஊராட்சி 6-வது வார்டில் 565 வாக்காளர்களும், கோவிலூர் ஊராட்சி 1-வது வார்டில் 293 வாக்காளர்களும், தளவாய் ஊராட்சி 9-வது வார்டில் 617 வாக்காளர்களும், சிறுகடம்பூர் ஊராட்சி 3-வது வார்டில் 331 வாக்காளர்களும், ஜெ.தத்தனூர் ஊராட்சி 5-வது வார்டில் 635 வாக்காளர்களும், இடையக்குறிச்சி ஊராட்சி 2-வது வார்டில் 375 வாக்காளர்களும், இலையூர் ஊராட்சி 9-வது வார்டில் 590 வாக்காளர்களும், அம்பாபூர் ஊராட்சி 8-வது வார்டில் 396 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள் 12 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 88 பேரும் ஈடுபடவுள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 7 போலீசாா் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். முன்னதாக தற்செயல் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களையும், வாக்கு எண்ணும் மையங்களையும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. அடுத்த மாதம் 12-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் 20-ந்தேதி பதவி ஏற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தா.பழூர்

Next Story