மகள் காதல் திருமணம் செய்ததால் தாய், தந்தை தற்கொலை


மகள் காதல் திருமணம் செய்ததால் தாய், தந்தை தற்கொலை
x
தினத்தந்தி 8 Oct 2021 5:04 AM GMT (Updated: 8 Oct 2021 5:04 AM GMT)

மகள் காதல் திருமணம் செய்ததால் விரக்தி அடைந்த தாய், தந்தை தற்கொலை செய்துகொண்டனர்.

செங்குன்றம்,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள முக்கரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மாம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தாமரைசெல்வன் (வயது 60). விவசாயி. இவருடைய மனைவி சரளா (55). இவர்களுடைய மகள் அர்ச்சனா (28). பல் டாக்டரான இவர், செங்குன்றம் அருகே இரட்டை ஏரி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார்.

இவர், பெரியபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி காதல் ஜோடி கடந்த மாதம் 27-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இதனால் தாமரைசெல்வன், சரளா இருவரும் மிகுந்த மனவேதனையுடன் இருந்து வந்தனர். நேற்று காலை தாமரைசெல்வன் வயலுக்கு சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் மின்விசிறியில் தனது மனைவி சரளா, தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் மேலும் விரக்தி அடைந்த தாமரைசெல்வன், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story