உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் போராட்டம்


உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2021 9:41 PM GMT (Updated: 9 Oct 2021 9:41 PM GMT)

உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

அரியலூர்:

பையில் குழந்தையின் உடல்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சேகர். இவரது மனைவி மணிமேகலை(வயது 24). 9 மாத கர்ப்பிணியாக இருந்த மணிமேகலையை, பிரசவத்திற்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேகர் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு பெண் குழந்தை இறந்தே பிறந்ததாக தெரிகிறது. இதையடுத்து மருத்துவமனையில் பணியில் இருந்தவர்கள், அந்த குழந்தையின் உடலை ஒரு பையில் வைத்து மணிமேகலையின் உறவினர்களிடம் கொடுத்துள்ளனர்.
போராட்டம்
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக கவனிக்காததாலும், சரியான சிகிச்சை அளிக்காததாலும் குழந்தை இறந்து போனதாகவும், அதை ஒரு துணிப்பையில் வைத்து கொடுத்தது மிகவும் கொடுமையானது என்றும் கூறி மருத்துவமனை முன்பு போராட்டத்தின் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த அரியலூர் போலீசார் மற்றும் டாக்டர்கள் அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மணிமேகலையின் உறவினர்களை சமாதானம் செய்து, அந்த குழந்தையின் உடலை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்து, குன்னத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனை முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story