அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை 30 மணி நேரத்தில் மீட்பு


அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை 30 மணி நேரத்தில் மீட்பு
x
தினத்தந்தி 10 Oct 2021 3:21 AM GMT (Updated: 10 Oct 2021 3:21 AM GMT)

தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை 30 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். உதவுவது போல நடித்து கட்டைப்பையில் வைத்து குழந்தையை எடுத்துச்சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 24), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ராஜலட்சுமி(22). இவர்கள் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 5-ந் தேதி தஞ்சையில் உள்ள ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், ஆஸ்பத்திரியில் ராஜலட்சுமிக்கு அறிமுகமான பெண் ஒருவர் அவருக்கு உதவுவது போல் நடித்தார். நேற்றுமுன்தினம் ராஜலட்சுமி குளிக்க சென்ற நேரத்தில் அவரது குழந்தையை ஒரு கட்டைப்பையில் வைத்து எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரியில் இருந்து அந்த பெண் கடத்தி சென்றார்.

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக தஞ்சை நகர மேற்கு போலீசார் ஆஸ்பத்திரி வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். இதில், ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையை கடத்திய பெண் ஆட்டோவில் புதிய பஸ் நிலையம் சென்றது தெரிய வந்தது. குழந்தையை கடத்திய பெண்ணை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

குழந்தை மீட்பு; பெண் கைது

இந்தநிலையில், குழந்தையை கடத்திய பெண் பட்டுக்கோட்டை அண்ணா நகர் காலனியில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படையினர் அங்கு சென்று குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தையை கடத்தியதாக பாலமுருகன் மனைவி விஜி(37) என்பவரை கைது செய்தனர். பின்னர் குழந்தை தஞ்சை கொண்டு வரப்பட்டு ராஜலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை பார்த்ததும் ராஜலட்சுமி ஆனந்த கண்ணீர் வடித்தார். தனது குழந்தையை வாரி அணைத்து முத்தமழை பொழிந்தார். பின்னர் ராஜலட்சுமியும், குணசேகரனும் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர். குழந்தை கடத்தப்பட்ட 30 மணி நேரத்தில் மீட்கப்பட்டதாக தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தெரிவித்தார்.

கடத்தியது ஏன்?

குழந்தையை கடத்தியதாக கைது செய்யப்பட்ட விஜிக்கு ஏற்கனவே 2 கணவர்கள் உள்ளனர். தற்போது 3-வதாக பாலமுருகன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் வசித்து வந்துள்ளார்.

3-வது கணவரிடம் சொத்துக்கள் இருப்பதை அறிந்துகொண்ட விஜி அந்த சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டு உள்ளார். இதற்காக தான் கர்ப்பமாக இருப்பதாக பாலமுருகனிடம் பொய் கூறி உள்ளார். இதை நிரூபிப்பதற்காக தனக்கு பிறந்தது போல் காட்டுவதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்து ராஜலட்சுமியின் குழந்தையை விஜி கடத்தியது தெரியவந்துள்ளது.

Next Story