250 ஊராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்


250 ஊராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்
x
தினத்தந்தி 10 Oct 2021 5:15 PM GMT (Updated: 10 Oct 2021 5:15 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் 250 ஊராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

மந்தாரக்குப்பம், 

கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 4 கட்டங்களாக சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 88 ஆயிரத்து 190 பேருக்கும், 2-வது கட்டமாக 55 ஆயிரத்து 92 பேருக்கும், 3-வது கட்டமாக 1 லட்சத்து 15 ஆயிரத்து 190 பேருக்கும், 4-வது கட்டமாக 93 ஆயிரத்து 594 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நேற்று 5-வது கட்டமாக 920 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தது. இதில் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

கலெக்டர் ஆய்வு

இதில் விருத்தாசலம் வட்டம் கங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகம், கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிலையம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட பாலக்கரை ஆகிய பகுதிகளிலும் தடுப்பூசி முகாம் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கொரோனா தொற்று நோய் பரவல் குறைந்து வருகிறது. கடந்த மாதங்களை விட தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இதற்கு காரணம் அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதே ஆகும்.
நமது மாவட்டத்தில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 20 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடவேண்டியுள்ளது. சுமார் 250 ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 82 வார்டுகளில் கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் போடப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல்

இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தகுதி வாய்ந்த நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தண்ணீர் தேங்கா வண்ணம் கண்காணித்து வாரம் ஒருமுறை பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட மலேரியா அலுவலர் கெஜபதி, விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், நகராட்சி ஆணையாளர் அருள்செல்வன், செயல் அலுவலர் குமார், வட்டார மருத்துவ அலுவலர்கள் புலிகேசி, பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நேற்று நடந்த முகாம்களில் 89 ஆயிரத்து 62 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story