ஒரே நாளில் 73,007 பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஒரே நாளில் 73,007 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 10 Oct 2021 9:05 PM GMT (Updated: 10 Oct 2021 9:05 PM GMT)

ஒரே நாளில் 73,007 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

பெரம்பலூர்:

சிறப்பு முகாம்கள்
கொரோனா வைரசின் 3-ம் அலை வராமல் தடுக்க தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நேற்று 5-வது கட்டமாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதன்படி 5-வது கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 240 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 300 இடங்களிலும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
முகாமில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டன. இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டு தவணை நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களும் ஆர்வத்துடன் முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து கொரோனா தடுப்பூசி போட்டுச்சென்றனர். சில முகாம்களில் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுச்சென்றனர்.
73 ஆயிரத்து 7 பேருக்கு தடுப்பூசி
காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடந்தது. முகாமினை பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவும், அரியலூர் மாவட்டத்தில் ரமணசரஸ்வதியும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட 4 சிறப்பு முகாம்களில் மொத்தம் 80 ஆயிரத்து 93 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நேற்று நடந்த 5-வது கட்ட சிறப்பு முகாமில் 24 ஆயிரத்து 176 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட 4 சிறப்பு முகாம்களில் மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 321 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நேற்று நடந்த 5-வது கட்ட சிறப்பு முகாமில் 48 ஆயிரத்து 831 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சிறப்பு பரிசு 
பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூர், பூலாம்பாடி, அரும்பாவூர், லெப்பைக்குடிகாடு ஆகிய 4 பேரூராட்சி பகுதிகளில் நேற்று நடந்த மாபெரும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சிறப்பு பரிசாக தலா ஒரு சில்வர் தட்டு வழங்கப்பட்டது.

Next Story