காரைக்குடி, திருப்பத்தூர் பகுதியில் பலத்த மழை


காரைக்குடி, திருப்பத்தூர் பகுதியில் பலத்த மழை
x
தினத்தந்தி 11 Oct 2021 6:34 PM GMT (Updated: 11 Oct 2021 6:34 PM GMT)

காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

காரைக்குடி,

காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் வேளையில் மிதமான வெயில் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு திடீரென வானம் கருமேகமூட்டத்துடன் காணப்பட்டது.இதையடுத்து காரைக்குடி பகுதியில் மாலை 4.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 7 மணி வரை பெய்தது. இதனால் தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 
மேலும் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் இரவு முழுவதும் குளுமையான நிலை நீடித்தது. ஏற்கனவே காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது வயல்களில் விவசாயத்தை தொடங்கிய நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குளுமையான நிலை

இதேபோல் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரம் பலத்த மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி  சென்றனர். இதேபோல் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. தொடர் மழை காரணமாக சிங்கம்புணரி பகுதியில் கயிறு தொழில் பாதிக்கப்பட்டது. இதேபோல் சிவகங்கை, திருப்புவனம், காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மிதமான சாரல் மழை பெய்தது.

Next Story