அரசு பஸ்-வேன் மோதல்; 21 பேர் படுகாயம்


அரசு பஸ்-வேன் மோதல்; 21 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Oct 2021 7:24 PM GMT (Updated: 11 Oct 2021 7:24 PM GMT)

திருச்சி அருகே கன்டெய்னர் லாரியை முந்த முயன்றபோது, வேன் மீது அரசு பஸ் மோதியதில் வேனில் இருந்த 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜீயபுரம், அக்.12-
திருச்சி அருகே கன்டெய்னர் லாரியை முந்த முயன்றபோது, வேன் மீது அரசு பஸ் மோதியதில் வேனில் இருந்த 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
குலதெய்வ கோவில்
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 40). இவர் நேற்று அதிகாலையில் குடும்பத்துடன் கரூர் தான்தோன்றிமலையில் உள்ள குல தெய்வகோவிலுக்கு வேனில் புறப்பட்டு சென்றார்.
வேனை திருச்சி உறையூரை சேர்ந்த அலெக்ஸ் (45) என்பவர் ஒட்டிவந்தார். வேன் திருச்சியை அடுத்த முக்கொம்பு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னால் கன்டெய்னர் லாரி சென்றது. வேன் டிரைவர் அதனை முந்த முயன்றார்.
அப்போது, கரூரிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக வேன் மீது மோதியது. இதனையடுத்து பஸ் சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டு இருந்த ஜல்லிகற்கள் மீது மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை.
உயிர்தப்பினர்
இதற்கிடையில் கன்டெய்னர் லாரியும் வேன் மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சுமார் 20 அடி தூரம் சென்று மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. வேன் மோதிய வேகத்தில் மின்வயரில் இருந்து தீப்பொறிகிளம்பியது.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள், முக்கொம்பு பொதுப்பணித்துறை பணியாளர்கள் மற்றும் ரோந்து போலீசார் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்ததால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. வேனில் தீப்பிடித்து இருந்தால் பெரும்உயிர்சேதம் ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக அதில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
21 பேர் படுகாயம்
இதனையடுத்து வேனில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அந்த வழியாக சென்ற ஆட்டோ மற்றும் வேன்களில் ஏற்றி  மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் வேனில் இருந்த அஞ்சலை (40), கணேசன் (54), ராணி (45), சரோஜா (55), சரண்யா (28), சதீஷ் (24), லெட்சுமி (50), தேவா (22), சித்ரா (30), காவேரியம்மாள் (40), செல்வி (32), மூர்த்தி (35), கவுரி (8), பாலாஜி (7), ஆறுமுகம், உதயகுமார் உள்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து  ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story