ராமநத்தம் அருகே டிராக்டர் மூலம் உழுது 6 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் அழிப்பு


ராமநத்தம் அருகே டிராக்டர் மூலம் உழுது 6 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் அழிப்பு
x
தினத்தந்தி 11 Oct 2021 7:28 PM GMT (Updated: 11 Oct 2021 7:28 PM GMT)

ராமநத்தம் அருகே விளைநிலத்தில் பங்கு கேட்டு டிராக்டர் மூலம் உழுது 6 ஏக்கர் மக்காச்சோள பயிர்களை அழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக தம்பதியை வலைவீசி தேடி வருகின்றனர்.

ராமநத்தம், 

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள தச்சூரைச் சேர்ந்தவர் வரதராஜ் (வயது 55), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார். நேற்று காலை வரதராஜ், மக்காச்சோள பயிர்களுக்கு மருந்து அடிப்பதற்காக விளை நிலத்திற்கு சென்றார்.

அப்போது மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் சேதமடைந்து கிடந்தது. மர்மநபர்கள் டிராக்டர் மூலம் நிலத்தை உழுது மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி இருப்பது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வரதராஜ், ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

பங்கு கேட்டு தகராறு

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மக்காச்சோளம் விதைக்கும் போதே வரதராஜியிடம், அவரது தம்பி தர்மா நிலத்தில் பங்கு கேட்டு தகராறு செய்துள்ளார். இது சம்பந்தமாக ராமநத்தம் போலீசில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் தர்மாவை போலீசார் அழைத்து கண்டித்து அனுப்பினர். இதுதொடர்பாக அண்ணன்-தம்பி இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக தர்மா தனது மனைவி அருந்தவம் மற்றும் மகன் அசோக்(19) ஆகியோருடன் சேர்ந்து டிராக்டர் மூலம் உழுது மக்காச்சோள பயிர்களை அழித்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார், அசோக்கை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தர்மா, அருந்தவம் ஆகியோரை தேடி வருகின்றனர். முன்விரோத தகராறில் அண்ணனுக்கு சொந்தமான மக்காச்சோள பயிர்களை, தம்பியே டிராக்டர் மூலம் உழுது அழித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story