தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 Oct 2021 10:21 PM GMT (Updated: 11 Oct 2021 10:21 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தேங்கி கிடக்கும் சாக்கடைநீர்

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் காவலாண்டியூர் பகுதியில் சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி தெருக்களில் சாக்கடை நீர் தேங்கி கிடக்கிறது. அதனுடன் மழைநீரும் கலந்து விடுவதால் அந்த தெருவில் நடக்ககூட முடியாத நிலை உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய்களை தூர்வாரி சாலையில் கழிவுநீழ் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சூரியகுமார், காவலாண்டியூர், சேலம்.

நிழற்கூடம் வேண்டும்

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை காமராஜர் நகர் காலனி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் மிகவும் அவதிப்படுகிறார்கள். பொதுமக்கள் நிறைந்த  பகுதி என்பதால் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அந்த பகுதியில் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும்.

சி.ராஜேந்திரன், அம்மாபேட்டை, சேலம்.

சாலை புதுப்பிக்கப்படுமா?

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் பூலாவரி அக்ரஹாரம் 9-வது வார்டு புஞ்சைக்காடு பகுதியில் தார்சாலை மிகவும் மோசமாக உள்ளது. பல ஆண்டுகள் ஆகியும் இந்த சாலை புதுப்பிக்கப்படவில்லை. குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் பயணிக்க வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், பூலாவரி அக்ரஹாரம், சேலம்.

பஸ் வசதி 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து எலச்சிபாளையம், வையப்பமலை, குருசாமிபாளையம் வழியாக ஆண்டகளூர் கேட் வரை 7-ஏ நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்சை ராசிபுரம் வரை நீட்டிப்பு செய்தால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும். 

-எம்.ஆர்.லட்சுமிநாராயணன், பெருமாள் கோவில் மேடு, நாமக்கல்.

தெருவிளக்குகள் எரிவது இல்லை

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த ஆஸ்பத்திரி நுழைவுவாயிலில் இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவது இல்லை. இதனால் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு வருவோர், இந்த இருளால் மிகவும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், தர்மபுரி.

விபத்துகளை ஏற்படுத்தும் லாரிகள்

கிருஷ்ணகிரியில் சுங்கச்சாவடியில் இருந்து கிருஷ்ணகிரி நகருக்குள் வரும் தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக சர்வீஸ் சாலையில் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அந்த வாகனங்களை அவ்வப்போது அப்புறப்படுத்தினாலும் தொடர்ந்து லாரிகள் அந்த சாலைகளில் நிறுத்தப்பட்டு வருகின்றன. எனவே சாலையோரங்களில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் லாரிகளை நிறுத்த போலீசார் தடை விதிக்க வேண்டும்.

-ஜெயக்குமார், புதுப்பேட்டை, கிருஷ்ணகிரி.

வேகத்தடைகளில் ஒளிரும் விளக்குகள்

கிருஷ்ணகிரி நகரில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 5 ரோடு ரவுண்டானா வரும் வரையில் உள்ள சாலை மற்றும் பெங்களூரு சாலையில் 8 வேகத்தடைகள் உள்ளன. இரவு நேரங்களில் இந்த வேகத்தடைகள் சரியாக தெரியாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் விபத்துகளை சந்திக்கிறார்கள். எனவே வேகத்தடைகள் உள்ள பகுதிகளில் இரவில் ஒளிரும் விளக்குகள் பொருத்திட வேண்டும் என்றும், வர்ணம் தீட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தமிழரசன், கோ-ஆப்ரேட்டிவ் காலனி, கிருஷ்ணகிரி.

சாக்கடை கால்வாயில் அடைப்பு 

சேலம் அழகாபுரம் ரெட்டியூர் 3-வது வார்டில் சாக்கடை கால்வாய் பிரச்சினை உள்ளது. சரியாக சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் தெரு முழுவதும் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லை அதிகரித்து தொல்லையாக இருக்கிறது. இதனால் நோய் வந்துவிடுமோ என்று பயமாகவும் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயின் அடைப்புகளை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-ராஜா, ரெட்டியூர், சேலம்.

புதிய பொதுகழிப்பிடம் வேண்டும் 

சேலம் மாவட்டம் வீரகனூர் பேரூராட்சி 2-வது வார்டில் திருச்சி மெயின் ரோடு பழைய அரசு ஆஸ்பத்திரி அருகில் பொதுகழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தில் குறைந்த அளவே கழிப்பறைகள் இருப்பதால் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்கின்றனர். இதனால் அவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் கழிப்பிடம் சரியாக தூய்மை செய்யப்படாததாலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனாலேயே நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பழைய கழிப்பிடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிதாக அதிக அறைகள் கொண்ட கழிப்பறைகள் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.முத்தழகன், சேலம்.

Next Story