குமரியில் நாள் முழுவதும் பலத்த மழை


குமரியில் நாள் முழுவதும் பலத்த மழை
x
தினத்தந்தி 11 Oct 2021 10:27 PM GMT (Updated: 11 Oct 2021 10:27 PM GMT)

குமரி மாவட்டத்தில் நேற்று நாள் முழுவதும் பலத்த மழையாகவும், சாரல் மழையாகவும் பெய்தது. இதனால் திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றியார் தரைப்பாலம் மூழ்கியதால் கிராம மக்கள் பரிதவித்தனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நேற்று நாள் முழுவதும் பலத்த மழையாகவும், சாரல் மழையாகவும் பெய்தது. இதனால் திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றியார் தரைப்பாலம் மூழ்கியதால் கிராம மக்கள் பரிதவித்தனர்.
பலத்த மழை
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு தொடங்கிய மழை விடிய, விடிய பலத்த மழையாகவும், சாரல் மழையாகவும் நீடித்தது. நேற்று காலையிலும் விட்டு, விட்டு மழை பெய்ததால் வானில் சூரியன் தெரியாதபடி கருமேகங்கள் சூழ்ந்திருந்தது. இந்த சீதோஷ்ண நிலை நாள் முழுவதும் இருந்தது. இதேபோல் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது.
இதன் காரணமாக பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. முக்கிய வேலைக்காக வெளியே செல்பவர்கள் மட்டும் இருசக்கர வாகனங்களில் மழையில் நனைத்தபடி சென்று வந்தனர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் கையில் குடைப்பிடித்தபடி நடந்து சென்றதை காணமுடிந்தது. 
68 மி.மீ. பதிவு
மழை காரணமாக நாகர்கோவிலில் உள்ள பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழையில் அதிகபட்சமாக இரணியல் பகுதியில் 68 மில்லி மீட்டர் பதிவானது. இதே போல் பூதப்பாண்டி-5, களியல்-38, கன்னிமார்-3.4, கொட்டாரம்-5.2, குழித்துறை-35.2, மயிலாடி-8.2, நாகர்கோவில்-15, புத்தன்அணை-5.4, சுருளகோடு-7, தக்கலை-10, குளச்சல்-24.6, பாலமோர்-8.2, கோழிப்போர்விளை-32, அடையாமடை-29, குருந்தன்கோடு-36.2, ஆனை கிடங்கு-20.4 என்ற அளவில் மழை பெய்திருந்தது. மேலும் அணை பகுதிகளை பொறுத்தவரையில் பேச்சிப்பாறை-9.4, பெருஞ்சாணி-7.2, சிற்றார் 1-12.5, சிற்றார் 2-17, மாம்பழத்துறையாறு-11.4, முக்கடல்-5.6 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
அணைகளுக்கு நீர்வரத்து
மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 978 கனஅடி தண்ணீர் வந்தது. இதே போல பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 605 கனஅடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 63 கனஅடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 87 கனஅடி தண்ணீரும், பொய்கை அணைக்கு வினாடிக்கு 4 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 6 கனஅடி தண்ணீரும், முக்கடல் அணைக்கு வினாடிக்கு 4 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணையில் இருந்து புத்தன் அணைக்கு செல்லும் கோதையார் இடதுகரை கால்வாயை தூர்வாரும் பணி நடைபெற்றதால் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதே போல நேற்றும் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 1,338 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. அதே சமயம் மாம்பழத்துறையாறு அணையில் இருந்து வினாடிக்கு 30 கனஅடி தண்ணீர் பாசன கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது.
அருவியில்                              வெள்ளப்பெருக்கு
கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் குற்றியார் தரைப்பாலம் மூழ்கியதால் பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மோதிரமலை, குற்றியார், முடவன் பொற்றை உள்பட 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் வேலைகளுக்குச் சென்று விட்டு தங்களுடைய வீடுகளுக்கு திரும்ப முடியாமல் பரிதவித்தனர். தொடர் மழையால் ரப்பர் பால் வெட்டும் தொழிலும் நடக்கவில்லை.
இதுகுறித்து பேச்சிப்பாறை ஊராட்சி தலைவர் தேவதாஸ் கூறுகையில், வெள்ளத்தால் தரைமட்ட பாலம் மூழ்கியதால் 12 கிராம மக்கள் பரிதவிக்கிறார்கள். இந்த பிரச்சினை தொடர்ந்து நிலவி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் ரெகு காணி கூறுகையில், குற்றியார் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அது நிறைவேற்றப்படவில்லை என்றார்.
புதுக்கடை
முன்சிறை, புதுக்கடை, மங்காடு பகுதியில் நேற்று பகல் முழுவதும் பெய்த மழையால் மங்காடு பகுதியில் உள்ள சுற்றுப்புற பகுதிகளான தென்னந்தோப்புகள் மற்றும் வயல்களில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Related Tags :
Next Story