டாஸ்மாக் கடைக்கு முன்பு குவிந்து கிடக்கும் மதுபாட்டில்கள்


டாஸ்மாக் கடைக்கு முன்பு குவிந்து கிடக்கும் மதுபாட்டில்கள்
x
தினத்தந்தி 12 Oct 2021 11:41 AM GMT (Updated: 12 Oct 2021 11:41 AM GMT)

உடுமலையில் டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு மதுபாட்டில்கள் அப்புறப்படுத்தப்படாமல் குவிந்து கிடக்கிறது.

உடுமலை
உடுமலையில் டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு மதுபாட்டில்கள் அப்புறப்படுத்தப்படாமல் குவிந்து கிடக்கிறது.
டாஸ்மாக் கடைகள்
உடுமலை நகராட்சி பகுதியில் 8 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வரும் மதுப்பிரியர்கள் சிலர், மது வாங்கியதும் கடைகளுக்கு முன்பே திறந்த வெளியில் மது அருந்துகின்றனர். உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிவருகிறவர்கள், அருகில் சர்தார் வீதியில் உள்ள நகராட்சி விரிவாக்கம் நடுநிலைப்பள்ளிக்கு முன்பு சாலைப்பகுதியில் உட்கார்ந்து மது அருந்தி விட்டு பாட்டில்களை மழைநீர் வடிகால்களில் போட்டு விட்டு செல்கின்றனர்.
உடுமலை சரவணாவீதி, பசுபதிவீதி, அனுஷம்நகர் மற்றும் பைபாஸ் சாலைக்கு அருகில் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் மதுபாட்டில்களை வாங்கும் மதுப்பிரியர்கள் கடைகளுக்கு முன்பு மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்கள், மற்றும் அதன் அட்டைப்பெட்டிகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றை அதே இடங்களில் போட்டு விட்டு செல்கின்றனர். அவற்றை நகராட்சி துப்புரவுப்பணியாளர்கள் அப்புறப்படுத்தி சுத்தம் செய்து வருகின்றனர்.
 மதுபாட்டில்கள்
மத்திய பஸ் நிலையத்திற்கு கிழக்குப்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அவர்கள், வாகன போக்குவரத்து இல்லாத அந்த கடைக்கு முன்பு ஆங்காங்கு திறந்த வெளியில் உட்கார்ந்து மது குடிக்கின்றனர். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் உடுமலையில் தாராளமாக கிடைக்கிறது. அவற்றை மதுப்பிரியர்கள் வாங்கிவந்து மது ஊற்றி குடித்துவிட்டு காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், மதுபாட்டில்களின் அட்டைப்பெட்டிகள் ஆகியவற்றை சாலையிலும், சாலை ஓரத்திலும் வீசி செல்கின்றனர்.
அவை பல நாட்களாக அப்புறப்படுத்தப்படாமல், அந்த டாஸ்மாக் கடைக்கு எதிரே சாலையோரம் நீண்ட தூரத்திற்கு கிடக்கிறது. அதனால் அந்த பகுதியில் சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த பகுதியில் குவிந்தும், சிதறியும் கிடக்கும் காலிமதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், அட்டைப்பெட்டிகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
---
உடுமலை மத்திய பஸ் நிலையத்திற்கு கிழக்குப்புறம் உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிரே காலி மதுபாட்டில்கள், அட்டைப்பெட்டிகள் ஆகியவை குவிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

Next Story