செந்துறை அருகே மந்தையம்மன் கோவில் திருவிழா மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது


செந்துறை அருகே  மந்தையம்மன் கோவில் திருவிழா  மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது
x
தினத்தந்தி 12 Oct 2021 3:34 PM GMT (Updated: 12 Oct 2021 3:34 PM GMT)

செந்துறை அருகே மந்தையம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது.

செந்துறை:
 நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள பெரியூர்பட்டியில் ஸ்ரீமந்தையம்மன் கருத்தநாயக்கர் மந்தை கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 5-ந்தேதி முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்துடன் தொடங்கியது. 8 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் 18 பட்டிக்கு கட்டுப்பட்ட 96 கிராமங்களை சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் தங்கள் பகுதியில் வளர்க்கும் சாமி மாடுகளுடன் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட ஆண்களில் பெரும்பாலானோர் சட்டை அணியாமல் இடுப்பில் வெள்ளை வேட்டியும், தலையில் துண்டும் கட்டியிருந்தனர். 
திருவிழாவில் நேற்று மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான அதில் அந்த சமுதாய மக்கள் சடங்குகள் செய்து, பல்வேறு மந்தைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சாமி மாடுகளை அழைத்து வந்து கோவில் முன் பூஜைகள் செய்யப்பட்டது.
கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொத்துகொம்பு எல்லைக்கு அனைத்து சாமி மாடுகளை அழைத்து சென்றனர். அங்கிருந்து சாமி மாடுகள் கரடு முரடான பாதையில் கோவிலை நோக்கி விரட்டி வந்தனர். மாடுகளுடன் அந்த சமுதாயத்தை சேர்ந்த ஆண்கள் காலில் செருப்பு அணியாமல் ஓடி வந்தனர். பின்னர் மாலை தாண்டும் நிகழ்ச்சியில் தரையில் போடப்பட்டு இருந்த வெள்ளை துணியை தாண்ட வைத்தனர். 
இதில் 200 சாமி மாடுகள் பங்கேற்றது. மாலை தாண்டுதலில் முதல், 2-வது மற்றும் 3-வதாக வந்த சாமி மாடுகள் கவுரவிக்கப்பட்டது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். விழாவில் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story