‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 12 Oct 2021 3:59 PM GMT (Updated: 12 Oct 2021 3:59 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்:
எரியாத தெருவிளக்குகள் 
வத்தலக்குண்டு ஒன்றியம் செங்கட்டாம்பட்டி கிராமத்தில் 3-வது வார்டு உள்ளிட்ட சில பகுதிகளில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் கிராமத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கி விடுகின்றன. பெண்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. எனவே தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும். -ராசுக்குட்டி, செங்கட்டாம்பட்டி.
சாலையில் ராட்சத பள்ளம்
உத்தமபாளையத்தில் கிறிஸ்தவ ஆலயத்தின் அருகே கோம்பை செல்லும் சாலை சேதம் அடைந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. தற்போது சாலையில் ராட்சத பள்ளம் தோன்றி விட்டதால், மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இதை தடுக்க சாலை பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். -செந்தில், உத்தமபாளையம்.
சேதமடைந்த சாக்கடை பாலம்
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் வி.ஐ.பி. நகரில் சிவன்கோவில் முன்புள்ள சாக்கடை பாலம் சேதம்அடைந்து விட்டது. இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு பாலம் உருக்குலைந்து விட்டது. எனவே சாக்கடை பாலத்தை புதிதாக கட்ட வேண்டும். -காமாட்சி, திண்டுக்கல்.
சாலையில் வீணாக செல்லும் குடிநீர்
தேனியில் இருந்து போடி செல்லும் சாலையில் பத்ரகாளிபுரத்தில் சாலைகள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டன. இதனால் சாரல் மழை பெய்தால் கூட குளம் போல் தண்ணீர் தேங்குகிறது. அதேபோல் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வீணாக செல்கிறது. சாலையை சீரமைக்கவும், குடிநீர் வீணாவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேஷ், தேனி.
வேகத்தடை அமைப்பார்களா?
திண்டுக்கல்லில் ஏ.எம்.சி.ரோடு மற்றும் மெங்கில்ஸ் ரோடு சந்திக்கும் இடத்தில் வேகத்தடைகள் எதுவும் இல்லை. இந்த சந்திப்பில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி சிறுசிறு விபத்துகள் நடக்கின்றன. மேலும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேகத்தடைகள் அமைக்க வேண்டும். -மகேந்திரன், திண்டுக்கல்.


Next Story