மூடி கிடக்கும் வேளாண் மையம் மீண்டும் செயல்படுவது எப்போது?


மூடி கிடக்கும் வேளாண் மையம் மீண்டும் செயல்படுவது எப்போது?
x
தினத்தந்தி 12 Oct 2021 4:54 PM GMT (Updated: 12 Oct 2021 4:54 PM GMT)

மூடி கிடக்கும் வேளாண் மையம் மீண்டும் செயல்படுவது எப்போது? என்று நெகமம் பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

நெகமம்

மூடி கிடக்கும் வேளாண் மையம் மீண்டும் செயல்படுவது எப்போது? என்று நெகமம் பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். 

15 கிலோ மீட்டர் தூரம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் மற்றும் கிணத்துக்கடவு ஒன்றிய விவசாயிகளின் வேளாண் தேவையை நிறைவேற்ற வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் அந்தந்த ஒன்றியங்களில் செயல்படுகின்றன. இங்கு விதைகள், உரங்கள், தொழில்நுட்ப உதவிகள், வேளாண் கருவிகள் மற்றும் விவசாய சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய விவசாயிகளுக்கான வேளாண் அலுவலகம், உரக்கிடங்கு, சேமிப்பு கிடங்கு ஆகியவை பொள்ளாச்சியில் செயல்படுகின்றன. 

ஆனால் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்டு 15 கி.மீ. தூரத்தில் உள்ள நெகமம் பகுதி விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்கள், உரங்கள், தொழில்நுட்ப உதவிகளை பெற பொள்ளாச்சிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

வேளாண் விரிவாக்க மையம்

இதனால் விவசாயிகளின் சிரமத்தை தவிர்க்க நெகமத்தில் துணை வேளாண் விரிவாக்க மையம், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நெகமம் வாரச்சந்தைக்கு அருகே என்.சந்திராபுரம் ரோட்டில் செயல்பட்டது. ஆனால் இந்த வேளாண் மையம் செயல்பட தொடங்கிய சில ஆண்டுகளில் முடங்கி விட்டது. தற்போது ஆள் நடமாட்டம் இன்றி அந்த அலுவலக வளாகம் புதர்மண்டி கிடக்கிறது. மேலும் கட்டிடம் முழுவதும் கம்பி வேலி அமைத்து அதற்குள் யாரும் செல்ல முடியாத அளவுக்கு உள்ளது. 
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது:-

நெகமம் மற்றும் அதனை சுற்றி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் வேளாண் தொழில்நுட்ப உதவிகள், ஆலோசனைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விதைகளை பெற நீண்ட தூரம் செல்ல வேண்டி இருந்தது. இதனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு மூடப்பட்டது. 

முட்புதர்கள் படர்ந்து...

இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு வேளாண் விரிவாக்க மைய அதிகாரிகள் நெகமத்தில் உள்ள கட்டிடத்தை பார்வையிட்டு சென்றனர். ஆனாலும் இதுவரை திறக்கப்படவில்லை.

இந்த அலுவலகத்தில் வாரம் ஒருநாள் மட்டும் அலுவலக பணியாளர்கள் வந்து செல்கின்றனர். எனவே பூட்டிக்கிடக்கும்  வேளாண் விரிவாக்க மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறும்போது, நெகமத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் மின்சார வசதி, தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி இல்லை. மேலும் கட்டிடங்களை சுற்றிலும் முட்புதர்கள் படர்ந்து உள்ளது. இவை அனைத்தும் விரைவில் சரிசெய்யப்பட்டு திறக்கப்படும் என்றனர்.


Next Story