வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு: 300 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின விவசாயிகள் கண்ணீர்


வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு: 300 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின விவசாயிகள் கண்ணீர்
x
தினத்தந்தி 12 Oct 2021 5:15 PM GMT (Updated: 12 Oct 2021 5:15 PM GMT)

விருத்தாசலம் அருகே வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் 300 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.

விருத்தாசலம், 

பலத்த மழை

விருத்தாசலம் அருகே உள்ள காவனூர், பவழங்குடி, கீரமங்கலம், மருங்கூர், மேலப்பாளையூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் சம்பா நெல் சாகுபடி செய்து, பராமரித்து வந்தனர். இதுதவிர கரும்பு, மணிலா உள்ளிட்ட பல்வேறு பயிர்களையும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக விருத்தாசலம் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வந்தது.

விளைநிலங்களில் மழைநீர் புகுந்தது

இதனால் மேற்கண்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 300 ஏக்கர் விளைநிலங்களுக்குள் மழைநீர் புகுந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. இந்த நீரை அகற்ற விவசாயிகள் முயற்சி செய்தும், அவர்களால் முடிய வில்லை. கடந்த 5 நாட்களாக விளை நிலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் நெல், மணிலா உள்ளிட்ட பயிர்கள் அழுகி வருகிறது.
இதனால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பயிர்களை சாகுபடி செய்திருந்த விவசாயிகள் தற்போது விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை கண்டு கண்ணீர் வடித்து வருகிறார்கள். 

ஆக்கிரமிப்பு

இதுகுறித்து மருங்கூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், 
விருத்தாசலம் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் பெரும்பாலனவை ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. இதனால் ஆண்டுதோறும் மழைகாலங்களில் விளைநிலங்களுக்குள் மழைநீர் புகுந்து பயிர்கள் அழுகி வருகிறது. மருங்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வடிகால் வாய்க்கால்களை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

நஷ்டம்

 ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் என்னை போன்ற விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 
எனவே விவசாயிகள் நலன்கருதி மேற்கண்ட கிராமங்களில் ஆக்கிரமிப்பில் உள்ள வடிகால் வாய்க்கால்களை மீட்டு, தூர்வாரி வயல்களில் தேங்கி நிற்கும் மழைநீர் வழிந்தோட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் மழைநீரால் அழுகிய பயிர்களை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, உரிய நிவாரணமும் வழங்கவேண்டும் என்றார். 

Next Story