நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வெள்ளி கவசம் புதுப்பிக்கும் பணி


நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வெள்ளி கவசம் புதுப்பிக்கும் பணி
x
தினத்தந்தி 12 Oct 2021 6:15 PM GMT (Updated: 12 Oct 2021 6:15 PM GMT)

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வெள்ளி கவசம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல்:
ஆஞ்சநேயர் கோவில்
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறும். மேலும் ஆஞ்சநேயருக்கு முக்கிய விசேஷ நாட்களில் தங்க கவசம், வெள்ளி கவசம், முத்தங்கி, சந்தன காப்பு, வெண்ணை காப்பு உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படும். இதில் உள்ளூர் மட்டும் இன்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
வெள்ளி கவசம் புதுப்பிக்கும் பணி
இந்தநிலையில் சாமிக்கு அணிவிக்கப்படும் வெள்ளி கவசம் ஒரு சில இடங்களில் ஒளி மங்கி காணப்பட்டது. அதை சீரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி புதுப்பிக்கும் பணி நேற்று முன்தினம் நகை சரிபார்ப்பு உதவி ஆணையர் குமரேசன், கோவில் உதவி ஆணையர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது.
சேலத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நகை செய்யும் தொழிலாளர்கள், ஆஞ்சநேயரின் வெள்ளி கவசத்தை பாலீஸ் செய்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி இன்று (புதன்கிழமை) முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட வெள்ளி கவசம், ஆயுத பூஜை அன்று சாமிக்கு அணிவிக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story