கள்ளத்தொடர்பு விவகாரத்தில் தந்தை-மகன் படுகொலை


கள்ளத்தொடர்பு விவகாரத்தில் தந்தை-மகன் படுகொலை
x
தினத்தந்தி 12 Oct 2021 7:16 PM GMT (Updated: 12 Oct 2021 7:16 PM GMT)

நெல்லை அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அடுத்தடுத்து தந்தை-மகன் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:
நெல்லை அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அடுத்தடுத்து தந்தை-மகன் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்ம சாவு

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடியை சேர்ந்தவர் அய்யாத்துரை என்ற பீர் (வயது 55). இவர் நேற்று முன்தினம் மாலை நொச்சிகுளம் ஊருக்கு தெற்கு பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் மர்மமான முறையில் பிணமாக மிதந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவந்திபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது சாவு குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

மகன் வெட்டிக்கொலை

இந்த நிலையில் அய்யாதுரையின் மகன் கூலி தொழிலாளியான கோதர் சரவணன் (22) நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த கோதர் சரவணன் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்தார். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், சிவந்திபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோதர் சரவணன் உடலை பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு தகவல்கள்

மேலும், இந்த பயங்கர கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. கொலை செய்யப்பட்ட கோதர் சரவணன், அவரது தந்தை அய்யாத்துரை ஆகியோருக்கும், நொச்சிகுளத்தை சேர்ந்த 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில்தான் அய்யாத்துரை கல்குவாரி குட்டையில் பிணமாக மிதந்து உள்ளார். இதனால் சரவணன் நொச்சிகுளம் பகுதிக்கு சென்று 2 பேரிடம், எனது தந்தையை நீங்கள்தான் கொன்று விட்டீர்கள் என்று கூறி தகராறு செய்துள்ளார். இதையடுத்து வீட்டில் தூங்கிய அவரை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்து இருக்கிறார்கள். எனவே, அய்யாத்துரையும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

2 பேரை பிடித்து விசாரணை

தந்தை-மகன் படுகொலை தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், அய்யாத்துரையின் உடலில் காயங்கள் இல்லை. இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன்தான், அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அடுத்தடுத்து தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story