கோவில்களுக்கு சொந்தமான நகைகளை உருக்குவது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் அர்ஜூன் சம்பத் பேட்டி


கோவில்களுக்கு சொந்தமான நகைகளை உருக்குவது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் அர்ஜூன் சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 12 Oct 2021 7:56 PM GMT (Updated: 12 Oct 2021 7:56 PM GMT)

கோவில்களுக்கு சொந்தமான நகைகளை உருக்குவது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என அர்ஜூன் சம்பத் கூறினார்.

கும்பகோணம்:-

கோவில்களுக்கு சொந்தமான நகைகளை உருக்குவது  முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என அர்ஜூன் சம்பத் கூறினார்.

மாணவிக்கு பாராட்டு

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 9-ம் வகுப்பு மாணவி நிரஞ்சனா தேவி தேசிய அளவிலான சிலம்பம் சுற்றும் போட்டியில் நீண்ட நேரம் சிலம்பு சுற்றி சாதனை படைத்தார். அவருக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. சதி செய்கிறது

3 நாட்கள் கோவிலை அடைத்து வைக்க வேண்டும் என்கிற நடைமுறையை ரத்து செய்து நவராத்திரி காலங்களில் பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் தி.மு.க. அரசுதான்.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் கொண்டு வந்தால் ரூ.30 முதல் ரூ.40 வரை விலை குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வராதபடி தி.மு.க. சதி செய்து வருகிறது.

முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்

கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி தங்கமாக டெபாசிட் செய்ய குழு அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த குழுவை அமைப்பதற்கான அதிகாரம் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கோ, தமிழக அரசுக்கோ கிடையாது. இதுபோன்ற குழுக்களை அறங்காவலர்கள் மட்டுமே அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான தங்க நகைகளை உருக்குவது தொடர்பான முடிவுகளை அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் இணைந்து எடுத்தால் அது பல்வேறு முறைகேடுகளுக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும். எனவே தமிழக அரசு இந்த முடிவை கைவிட வேண்டும். கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். அறநிலையத்துறையும், அரசியல்வாதிகளும் கோவிலை விட்டு வெளியேற வேண்டும்.

அவசியமில்லாத ஒன்று

கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி தான் கோவில்களுக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும் என்பது கிடையாது. எனவே தங்கத்தை உருக்கி முதலீடு செய்ய வேண்டும் என்கிற திட்டம் தற்போது அவசியமில்லாத ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் குருமூர்த்தி, மாவட்ட செயலாளர் அனபாயன், மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக், செயலாளர் சுவாமிநாதன், அமைப்பு செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story