உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்


உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
x
தினத்தந்தி 12 Oct 2021 8:11 PM GMT (Updated: 12 Oct 2021 8:11 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

உள்ளாட்சி தேர்தல்
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இறப்பு காரணமாக காலியாக இருந்த பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை ஒன்றியம் பிரம்மதேசம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், வாலிகண்டபுரம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேரும், வேப்பூர் ஒன்றியம் ஆடுதுறை ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் என மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த ஆண்டிமடம் ஒன்றியம் ஓலையூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 6 பேரும், தா.பழூர் ஒன்றியம் நாயகனைப்பிரியாள் ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேரும், மணகெதி ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும் போட்டியிட்டனர். ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் அரியலூர் ஒன்றியம் ஒட்டக்கோவில் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், திருமானூர் ஒன்றியம் வெற்றியூர் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேரும், கோவிலூர் 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், செந்துறை ஒன்றியம் தளவாய் 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், சிறுகடம்பூர் 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஜெயங்கொண்டம் ஒன்றியம் ஜெ.தத்தனூர் 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஆண்டிமடம் ஒன்றியம் இடையக்குறிச்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், இலையூர் 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், தா.பழூர் ஒன்றியம் அம்பாபூர் 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேரும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணும் பணி
தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 9-ந்தேதி நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 877 வாக்காளர்களில் 679 பேர் வாக்களித்தனர். இதன்படி மொத்தம் 77.42 சதவீத வாக்குகள் பதிவானது. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 332 வாக்காளர்களில், 8 ஆயிரத்து 916 பேர் வாக்களித்ததால் மொத்தம் 78.68 சதவீத வாக்குகள் பதிவானது.
இதைத்தொடர்ந்து வாக்குப்பெட்டிகள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் உள்ள அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒன்றிய அலுவலகங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
வாலிகண்டபுரம், பிரம்மதேசம், ஆடுதுறை
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர். வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. இதில் வாலிகண்டபுரம் ஊராட்சி 7-வது வார்டில் ெமாத்தமுள்ள 423 வாக்குகளில் 353 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் வேட்பாளர் உதயமண்ணன் 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுப்பிரமணியனை விட கூடுதலாக 16 வாக்குகள் பெற்றார். 2 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.
பிரம்மதேசம் ஊராட்சி 6-வது வார்டில் மொத்தமுள்ள 155 வாக்குகளில் 125 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் வேட்பாளர் சந்தியா 56 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜெயக்கொடியை விட கூடுதலாக 6 வாக்குகள் பெற்றார். 2 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. 6 வாக்குகள் வித்தியாசத்தில் சந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதேபோல் வேப்பூரில் உள்ள மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் ஆடுதுறை ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் வேப்பூர் ஒன்றியம் ஆடுதுறை ஊராட்சி 4-வது வார்டில் மொத்தமுள்ள 299 வாக்குகளில் 201 வாக்குகள் பதிவாகின. இதில் வேட்பாளர் பன்னீர்செல்வம் 105 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கருப்பையாவை விட 9 வாக்குகள் கூடுதலாக பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வட்டார வளர்ச்சி அதிகாரி முரளிதரன் வழங்கினார்.
மணகெதி, நாயகனைப்பிரியாள்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மணகெதி, நாயகனைப்பிரியாள் ஆகிய ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள், அம்பாப்பூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவி ஆகியவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்தது. இதையொட்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அரியலூர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு திருமேனி, ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் ஆகியோர் தலைமையில் 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ேபாடப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டது. காலை 8 மணிக்கு முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 3 மேஜைகள் அமைக்கப்பட்டு, 3 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
முதல் சுற்றில் மணகெதி ஊராட்சியை சேர்ந்த 3 வாக்குச்சாவடிகளின் ஓட்டுப்பெட்டிகளும் 3 மேஜைகளில் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் மணகெதி ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில், தேர்தலில் பதிவான 1,008 வாக்குகளில் வேட்பாளர் பழனிவேல் 522 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட மகேஸ்வரி 477 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து பழனிவேல் 45 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 9 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக நாயகனைப்பிரியாள் ஊராட்சியின் ஓட்டுகள் 2 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இதில் பதிவான 2 ஆயிரத்து 779 வாக்குகளில், வேட்பாளர் ராஜாராம் 1,449 வாக்குகளும், வினோத்கண்ணன் 1,243 வாக்குகளும், செல்வராஜன் 20 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து ராஜாராம் 206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 67 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. அம்பாபூர் 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் வேட்பாளர் நிர்மலா 104 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பழனிசாமியை(78 வாக்குகள்) விட கூடுதலாக 26 வாக்குகள் பெற்றார். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராஜ் சான்றிதழ்களை வழங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார், சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர். வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் மற்றும் ஆவணங்கள் பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டு போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
ஆண்டிமடம் ஒன்றியம்
ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஓலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி, இலையூர் மற்றும் இடையக்குறிச்சி ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஆண்டிமடம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் தாசில்தார் முத்துகிருஷ்ணன், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவாஜி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இடையக்குறிச்சி 2-வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் பாண்டியன் 240 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ேபாட்டியிட்ட சாந்தி 81 வாக்குகள் பெற்றார். இலையூர் ஊராட்சி 9-வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் நீலமேகம் 253 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராசாக்கண்ணு 163 வாக்குகள் பெற்றார்.
ஓலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் பதிவான 1,788 வாக்குகளில் வேட்பாளர் குமாரி 1,050 வாக்குகள் பெற்று 821 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரவீணா 229 ஓட்டுகள் பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கினார். வாக்கு எண்ணிக்கையையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செந்துறை, திருமானூர், அரியலூர் ஒன்றியங்கள்
செந்துறை ஒன்றிய அலுவலகத்தில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் சிறுகடம்பூர் 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் மொத்தம் 289 வாக்குகள் பதிவாகின. இதில் வேட்பாளர் லெனின் 214 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட தங்கவேலு 67 வாக்குகளும் பெற்றனர். 147 வாக்குகள் வித்தியாசத்தில் லெனின் வெற்றி பெற்றார். தளவாய் ஊராட்சி 9-வது வார்டில் மொத்தம் 353 வாக்குகள் பதிவாகின. இதில் வேட்பாளர் ராஜேஸ்வரி 184 வாக்குகளும், ராஜா 167 வாக்குகளும் பெற்றனர். இதனால் 17 ஓட்டுகள் வித்தியாசத்தில் ராஜேஸ்வரி வெற்றி பெற்றார். 2 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம் சான்றிதழை வழங்கினார்.திருமானூர் ஒன்றியத்தில் கோவிலூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் மொத்தம் 254 வாக்குகள் பதிவாகின. இதில் வேட்பாளர் அலெக்சாண்டர் 144 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரமேஷ் 108 வாக்குகள் பெற்றார். 2 ஓட்டுகள் செல்லாதவை. வெற்றியூர் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் மொத்தம் 479 வாக்குகள் பதிவாகின. இதில் வேட்பாளர் ராஜீவ்காந்தி 323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சின்னப்பொண்ணு 66 வாக்குகள் பெற்றார். 3 ஓட்டுகள் செல்லாதவை. அரியலூர் ஒன்றியம் ஓட்டக்கோவில் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் ராமலிங்கம் 230 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஜெயங்கொண்டம் ஒன்றியம் ஜெ.தத்தனூர் ஊராட்சி 5-வது வார்டில் நந்தினி 353 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Next Story