பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 Oct 2021 9:22 PM GMT (Updated: 12 Oct 2021 9:22 PM GMT)

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பவானிசாகர்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற சிறப்பையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. இந்த அணையின் மொத்த  கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் தற்போது பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3,831 கன அடி நீர் வந்தது. 
நேற்று மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 6543 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 102 அடியாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. பவானி ஆற்றில் உபரி நீராக வினாடிக்கு 4200 கன அடி தண்ணீரும், கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வருவாய்த் துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இந்தநிலையில் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளான பெரிய கொடிவேரி, நஞ்சைபுளியம்பட்டி, அடசப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த்துறை சார்பில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. ஆற்றில்  துணி துவைக்கவோ, குளிக்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story