செங்கல்பட்டு மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நடந்த வாக்கு எண்ணிக்கை


செங்கல்பட்டு மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நடந்த வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 13 Oct 2021 12:08 AM GMT (Updated: 13 Oct 2021 12:08 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நடந்தது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 154 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 359 ஊராட்சி மன்ற தலைவர், 2,679 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 1,064 வாக்குச்சாவடி மையங்களில் அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2-கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பதிவான வாக்குகள் 8 மையங்களில் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சி மன்ற தலைவர், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 24 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு பதிவான வாக்குகள் மறைமலைநகர் அருகே மல்ரோஜபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எண்ணும் பணி நடைபெற்றது. வாக்கு எண்ணும் மையத்திற்கு தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பு குவிந்தனர்.

2 கட்டமாக தேர்தல்

அனைத்து பதவிகளுக்கும் சேர்த்து மொத்தம் 19 சுற்றுகள் வாக்கு எண்ணும் பணி நடைபெறுவதால் போட்டியிட்ட வேட்பாளர்கள் அவர்களுடைய முகவர்களுக்கு அலுவலர் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டையை போலீசார் பார்த்து மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் இரும்பு கம்பிகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பதிவான வாக்குகள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த வாக்கு பெட்டிகளை எடுப்பதற்காக வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட அறையை தேர்தல் அதிகாரி திறந்து வாக்குப்பெட்டிகளை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

கலெக்டர் ஆய்வு

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதனையடுத்து வாக்குப்பெட்டியில் உள்ள சீலை அகற்றிய ஊழியர்கள் வாக்கு பெட்டியில் பதிவாகியிருந்த 4 வண்ணங்களில் உள்ள வாக்குச்சீட்டுகளை தனித்தனியாக பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஒவ்வொரு வாக்குச்சீட்டை எடுத்து முகவர்களுக்கு ஊழியர்கள் காண்பித்த பிறகு போட்டியிட்ட வேட்பாளர்கள் சின்னம் ஒட்டப்பட்டு இருந்த மரபெட்டியில் வாக்குச்சீட்டுகளை 50 எண்ணிக்கை வீதம் அடுக்கி வைத்தனர்.

பின்னர் மொத்தமாக வாக்குகளை எண்ணிய பிறகு ஒலிபெருக்கி மூலம் தேர்தல் அதிகாரிகள் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் முடிவுகளை அறிவித்த வண்ணம் இருந்தனர். இதற்கிடையே வாக்கு எண்ணும் மையத்தில் செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் பார்வையாளர் சம்பத் வாக்கு எண்ணும் பணியை நேரில் ஆய்வு செய்தார்.

பலத்த பாதுகாப்பு

இதேபோல செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்தார். வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வெற்றி பெற்ற வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தங்களது மகிழ்ச்சியை பட்டாசு வெடித்து ஆரவாரமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Next Story