உடன்குடி பகுதியில் வேடமணிந்த தசரா பக்தர்கள் காணிக்கை வசூல்


உடன்குடி பகுதியில் வேடமணிந்த தசரா பக்தர்கள் காணிக்கை வசூல்
x
தினத்தந்தி 13 Oct 2021 11:03 AM GMT (Updated: 13 Oct 2021 11:03 AM GMT)

உடன்குடி பகுதியில் வேடமணிந்த தசரா பக்தர்கள் காணிக்கை வசூல் நடத்தி வருகின்றனர்

உடன்குடி:
உடன்குடி பகுதியிலுள்ள 50 கிராமங்களில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவை முன்னிட்டு வேடமணிந்த பக்தர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
தசரா திருவிழா
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் விரதம் இருந்து, பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் காணிக்கை வசூல் நடத்தி வருகின்றனர்.
இந்த வகையில் உடன்குடி வட்டாரத்திலுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் காளி, கருப்பசாமி, விநாயகர், முருகன், அம்மன் உள்ளிட்ட பல்வேறு விதவிதமான வேடங்கள் அணிந்து உடன்குடி பகுதியில் முழுவதும் கிராமங்களில் சுற்றி வந்து அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். 
கலைநிகழ்ச்சிகள்
ஏராளமான தசரா குழுவினர் கரகம், காவடி, குறவன், குறத்தி, தாரை, தப்பட்டை போன்றவற்றுடன் கிராமம் கிராமமாக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். 
தசரா திருவிழாவின் 10-ம் திருநாளான சூரசம்ஹார நிகழ்ச்சி, 11-ஆம் திருவிழாவில் காப்பு அவிழ்தல், 12-ஆம் திருவிழாவில் சிறப்பு பாலாபிசேகத்துடன் திருவிழா நிறைவு பூஜை ஆகிய 3 நாட்களும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. 
கிராமங்களில் தயார்
இதனால் அந்த கிராமங்களில் தசரா குழு அமைத்து அலங்கார மேடை அமைத்து விடிய, விடிய கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் காப்பு அவிழ்த்து வேடம் கலையவும் கிராமங்களில் தசரா குழுக்கள் தயாராகிவிட்டனர்.

Next Story