சாலையோர தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி


சாலையோர தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 13 Oct 2021 3:33 PM GMT (Updated: 13 Oct 2021 3:33 PM GMT)

சின்னமனூர் அருகே சாலையோர தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில், அதில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சின்னமனூர்:
சின்னமனூர் அருகே சாலையோர தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில், அதில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 
கல்லூரி மாணவர்கள்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்தவர் சுருளி வேல்சாமி. இவரது மகன் அபிமணி (வயது 21). இவரும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (21) என்பவரும் தேனி அருகே கோட்டூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். 
இவர்கள் 2 பேரும் தினமும் அழகாபுரியில் இருந்து கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாணவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றனர். 
தடுப்புச்சுவரில் மோதியது
கல்லூரி முடிந்தபிறகு மாலை 6 மணி அளவில் அபிமணியும், நாகராஜூவும் மோட்டார் சைக்கிளில் அழகாபுரி நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அபிமணி ஓட்டினார். நாகராஜ் பின்னால் அமர்ந்து வந்தார். 
அழகாபுரி விலக்கு அருகே அவர்கள் வந்தபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 2 மாணவர்களும் பரிதாபமாக இறந்தனர். 
சோகம்
இதுகுறித்து அபிமணியின் பெற்றோர் ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
சாலையோர தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story