கண்டமனூர் அருகே போலீஸ் பிடியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்


கண்டமனூர் அருகே போலீஸ் பிடியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2021 4:40 PM GMT (Updated: 13 Oct 2021 4:40 PM GMT)

கண்டமனூர் அருகே போலீஸ் பிடியில் இருந்து கைதி தப்பி ஓடினார்.

கடமலைக்குண்டு:
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கணேஷ்முண்டா (வயது 25). இவர் மதுரை கூடல்நகரில் உள்ள தனியார் ஓட்டலில் ெதாழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு வழக்கில் கணேஷ்முண்டாவை மதுரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். 
இதற்கிடையே நேற்று முன்தினம் தல்லாகுளம் போலீஸ் ஏட்டுகள் கணேசன், செந்தில் ஆகியோர் தேக்கம்பட்டி சிறையில் இருந்த கணேஷ்முண்டாவை வழக்கு விசாரணைக்காக மதுரை கோர்ட்டிற்கு அழைத்துச் சென்றனர். விசாரணை முடிந்து கணேஷ்முண்டாவை போலீசார் நேற்று தேக்கம்பட்டி சிறைச்சாலைக்கு பஸ்சில் அழைத்து வந்தனர். தேக்கம்பட்டி பஸ் நிறுத்தம் வந்தவுடன், போலீசார் சிறைச்சாலை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். 
அப்போது உடன் வந்த கணேஷ்முண்டா திடீரென்று போலீஸ் பிடியில் இருந்து தப்பி, அருகில் இருந்த மலைப்பகுதிக்குள் ஓடினார். போலீசார் விரட்டி சென்றும் அவரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கணேஷ்முண்டாவை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story