பெரியதச்சூர் ஊராட்சி மன்றதலைவர் பதவி: வெற்றி பெற்றவருக்கு எதிராக மக்கள் போராட்டம் தீக்குளிக்க முயன்ற் பெண்ணால் பரபரப்பு


பெரியதச்சூர் ஊராட்சி மன்றதலைவர் பதவி: வெற்றி பெற்றவருக்கு எதிராக மக்கள் போராட்டம்  தீக்குளிக்க முயன்ற் பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Oct 2021 5:16 PM GMT (Updated: 13 Oct 2021 5:16 PM GMT)

பெரியதச்சூர் ஊராட்சி மன்றதலைவர் பதவியில் வெற்றி பெற்றவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விக்கிரவாண்டி, 

மயிலம் ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெரியதச்சூர் ஊராட்சி ஆதிதிராவிடர் (எஸ்.சி.) பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. இதில் கணேசன் என்பவர் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில் தமிழ்செல்வன் என்பவர் தோல்வியை சந்தித்தார். 

 இந்த நிலையில், நேற்று தமிழ்செல்வனின் ஆதரவாளர்கள் பெரியதச்சூர் மந்தக்கரை கடை வீதி பகுதிக்கு திரண்டு சென்று, தங்களது பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஆதரவு அளிக்காமல், போலியான சாதிசான்றிதழ் கொடுத்து தேர்தலில் நின்ற கணேசன் என்பவரை வெற்றி பெற வைத்தீர்கள் என்று கிராம மக்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டனர்.  

இதனால் அங்கு பதற்றம் நிலவியது. எனவே வியாபாரிகள் அனைவரும் தங்களது கடைகளை உடனடியாக மூடினர். இதையடுத்து மோதல் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.


பின்னர்,  திண்டிவனம் தாசில்தார் செல்வம், கூடுதல் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் ஆகியோர் காலனி தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.


அப்போது,  காலனி தரப்பினர் தங்களுக்கு தனி கிராம அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மனுவாக அளியுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள்  தெரிவித்தனர். இதையேற்று அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். 

இதையடுத்து மாலையில் வியாபாரிகள் கடைகளை திறந்தனர். அப்போது காலனி தாரப்பை சேர்ந்த 5 பெண்கள் மந்தகரைக்கு வந்து கடையை திறக்க கூடாது என கூறினர்.

அதில், செல்வி(வயது 44) என்கிற பெண், தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க போவதாக கூறினார். அப்போது அங்கிருந்த போலீசார், அதை தடுத்து நிறுத்தினர்.  தொடர்ந்து அங்கு பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story