இன்று ஆயுதபூஜையையொட்டி பூஜை பொருட்கள் விற்பனை படுஜோர்


இன்று ஆயுதபூஜையையொட்டி பூஜை பொருட்கள் விற்பனை படுஜோர்
x
தினத்தந்தி 13 Oct 2021 5:51 PM GMT (Updated: 13 Oct 2021 5:51 PM GMT)

ஆயுத பூஜையையொட்டி கடைகளில் பூஜை பொருட்கள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

புதுக்கோட்டை:
ஆயுத பூஜை
நவராத்திரி விழாவின் முக்கிய பண்டிகையான ஆயுத பூஜை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடு, அலுவலகங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் சுத்தம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் ஆட்டோ, கார் வாகனங்கள் நிறுத்துமிடங்களிலும் வழிபாடு நடத்துவார்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்பதை குறிக்கும் வகையில் தங்கள் தொழில் சிறக்க இந்நாளில் பூஜைகள் மற்றும் வழிபாடு நடத்தப்படும். இதையொட்டி பொரி, அவுல், பொரிகடலை, கடலை, சர்க்கரை பொங்கல், சுண்டல், தேங்காய், பழம் மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளம் உள்ளிட்ட பழ வகைகள் வைத்து, கடவுள் படங்களுக்கு பூ மாலைகள் அணிவித்து பூஜை செய்து வழிபடுவது உண்டு.
பூஜை பொருட்கள்
இந்த நிலையில் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆயுதபூஜை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்க பொதுமக்கள் நேற்று புதுக்கோட்டை கடை வீதியில் குவிந்தனர். தெற்கு ராஜ வீதியில் பொரி, அவுல், கடலை மற்றும் வெற்றிலை, பாக்கு, மாலை, சூடம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை கடைகளில் கூட்டம் அலைமோதியது. பூஜை பொருட்கள் விற்பனையும் படுஜோராக நடைபெற்றது. இதேபோல பூஜைக்குரிய வாழைக்குலை, தடியங்காயும் மும்முரமாக விற்பனையாகின. பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகமாக இருந்ததால் விலை கொஞ்சம் சற்று குறைந்திருந்தது. வழக்கமாக பண்டிகை நேரத்தில் விலை அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று சற்று விலை குறைந்திருந்தது. புதுக்கோட்டை நகரப்பகுதியில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது.
பூக்கள் விற்பனை மும்முரம்
கீரமங்கலம், செரியலூர், பனங்குளம், பாண்டிக்குடி, குளமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், நெய்வத்தளி வம்பன், மறவன்பட்டி மற்றும் திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. ஏராளமான விவசாயிகள் பூக்கள் உற்பத்தியையே பிரதான விவசாயமாக செய்து வருகின்றனர். ஆயுத பூஜைக்கு வாகனங்கள் மற்றும் சுவாமி தரிசனங்களுக்காக அதிகமான மாலைகள் தேவைப்படுகிறது. அதனால் மாலை கட்டுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பே மாலைகட்டும் பணிகளை தொடங்கி உள்ளனர். 
இதற்கான பூக்களை கீரமங்கலம் மலர் சந்தையில் வாங்கி மாலைகள் கட்டப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த வகையில் நேற்று முன்தினம் மாலை கீரமங்கலம் மலர் கமிஷன் கடைகளுக்கு மூட்டை மூடையாக சென்டி, பச்சை, கோழிக்கொண்டை, வாடாமல்லி போன்ற மாலை கட்ட பயன்படும் பூக்கள் சுமார் 10 டன் அளவில் விற்பனைக்காக குவிந்தது. மாலை 5 மணிக்கு தொடங்கிய பூக்கள் விற்பனை இரவு நீண்ட நேரம் வரை பரபரப்பாக நடந்தது.
பூக்களை வாங்கிச் செல்ல தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, வேதாரண்யம், திருவாரூர், முத்துப்பேட்டை, நாகப்பட்டினம் மற்றும் ஏராளமான ஊர்களில் இருந்தும் பூ வியாபாரிகள் வந்து பூக்களை வாங்கிச் சென்றனர். பூக்களின் தரத்திற்கு ஏற்ப சென்டிப்பூ ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.80, வாடாமல்லி, கோழிக்கொண்டை ரூ.70, 80, 100-க்கும், பச்சை ரூ.20, 30, மல்லிகை ரூ.300, முல்லை ரூ.500, காக்கரட்டான் ரூ.400, சம்பங்கி ரூ.200, ரோஜா ரூ.60, 70, மாசிபச்சை ரூ.30-க்கு என விலை நிர்ணயம் செய்து வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்தனர். மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, கறம்பக்குடி, திருமயம், விராலிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கடைகளில் பூஜை பொருட்களை வாங்கி சென்றனர்.
கந்தர்வகோட்டை 
கந்தர்வகோட்டையில் கடை வீதியில் கடைகளில் ஆயுதபூஜைக்கு தேவையான அவல், பொரி, கடலை, சர்க்கரை, பூக்கள், காகித மாலைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நடைபெற்து. தற்போது கொரோனா தாக்கத்தின் காரணமாக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. நோய் பற்றிய அச்சத்தின் காரணமாகவும், ஆயுதபூஜை வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.

Next Story