தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது


தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது
x
தினத்தந்தி 13 Oct 2021 6:03 PM GMT (Updated: 13 Oct 2021 6:03 PM GMT)

தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.

திண்டுக்கல்: 

பொன்விழா ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டம் தொடர்பாக, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அ.தி.மு.க.வின் பொன்விழாவை அனைத்து கிளைகளிலும் கட்சி கொடியேற்றி கொண்டாட வேண்டும். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அப்போது நத்தம் விசுவநாதன் பேசுகையில், அ.தி.மு.க. 4 தலைமுறைகளை கண்ட இயக்கம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்கு பின்னரும் தொண்டர்கள், மக்களின் நம்பிக்கையை பெற்று அ.தி.மு.க. செயல்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்த போதெல்லாம் தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது. நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் கட்சி அ.தி.மு.க. மட்டுமே. தொண்டர்களின் தியாகத்தால் உருவான அ.தி.மு.க., யாராலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறது, என்றார்.

நிர்வாகிகள் 
இதில் மாவட்ட அவை தலைவர் குப்புசாமி, மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கண்ணன், மாநில இளைஞர் அணி இணை செயலாளர் சுப்புரத்தினம், தேன்மொழி எம்.எல்.ஏ., துணை செயலாளர்கள் சந்திரா, விஜயபாலமுருகன், பொருளாளர் வேணுகோபாலு, மாவட்ட சார்பு அணி செயலாளா்கள் ராஜ்மோகன், யூசுப் அன்சாரி, அன்வர்தீன், முத்தையா, உதயகுமார், ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், ஜெயசீலன், சின்னச்சாமி, நகர செயலாளர் ஸ்ரீதர், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story